கொரோனாவிற்கு பின்னரான நிலவரங்களைக் கையாளும் நோக்கோடு, சாவால்களுக்கு மத்தியில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பபட்டு வருகின்றன – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
Sunday, September 19th, 2021எமது கடற்றொழிலாளர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு விடயங்களை கையாள வேண்டும் என்ற எதிர்பார்ப்போடுதான், ஜனாதிபதியும் பிரதமரும் என்னிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்திருக்கின்றார்கள்,என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தான் அமைச்சராக இருக்கின்ற போதிலும் சில கூட்டுப் பொறுப்புக்களும் வரையறைகளும் தனக்கு இருப்பதை கடற்றொழிலாளர்கள் புரிந்து கொள்வார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தேசிய தமிழ் நாளிதளான தினகரன் வார மஞ்சரிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில் –
கடற்றொழில் அமைச்சராக பொறுப்பேற்று இரண்டு வருடங்களை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. ஆனாலும் குறித்த காலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தொடர்பாக திருப்தியடையவிவ்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் உண்மையைச் சொல்ல வேண்டுமாக இருந்தால் திட்டமிட்டவாறு செயற்பட முடியவில்லை என்பதையிட்டு வேதனையோடே இருக்கின்றேன் என்றும் சாண் ஏற முழம் சறுக்கிய கதையாகத்தான், குறித்த காலப் பகுதி நகர்ந்து கொண்டு இருக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உலக போக்கினையே மாற்றியமைத்திருக்கின்ற கொரோனா பரவல், நாம் ஆட்சிப் பொறுப்புக்களை ஏற்று சில மாதங்களுக்குள்ளேயே இலங்கைக்குள்ளும் ஊடுருவி தன்னுடைய கைவரிசையைக் காண்பித்துக் கொண்டிக்கின்றது. அதன்பின்னராக காலப் பகுதியானது, கொரோனாவை எதிர்கொள்ளவது மற்றும் அதனால் ஏற்பட்டு வருகின்ற பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்வது போன்றவை தொடர்பான சிந்தனைகளுடனே பெருமளவில் நகர்ந்து கொண்டிருக்கின்றது.
அதற்கு இடையில், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினாலும் கடற்றொழில் செயற்பாடுகள் பாரிய பாதிப்புக்களை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டுள்ளது. எனவே, நாம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட போது எம்மிடம் காணப்பட்ட திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுவதில் தாமதங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நீர் வேளாண்மை தொடர்பிலும் கூடிய கரிசனை செலுத்தி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நன்னீரில் மீன், இறால், நண்டு வளர்ப்புக்களை ஊக்குவிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்த அமைச்சர் கடலட்டை பண்ணைகளை அமைப்பதில் கணிசமான வெற்றியை பெற்றுள்ளதாகவும் குறிப்பாக கடலட்டைப் வளர்ப்பிற்கு பொருத்தமான இடங்களாக வடக்கின் பல்வேறு கடல் பிரதேசங்கள் விஞ்ஞான ரீதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாரம்பரிய தொழில் முறைகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் கடலட்டைப் பண்ணைகள் வடக்கில் அமைக்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|