வெற்றிகரமான கல்வி முறை இல்லாத நாட்டில் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது – ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவிப்பு!
Tuesday, March 26th, 2024வெற்றிகரமான கல்வி முறை இல்லாத நாட்டில் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் எத்தனை கல்விச் சீர்திருத்தங்களைச் தயார் செய்தாலும், அதற்கேற்ப மனித வளங்களை முகாமைத்துவம் செய்யாவிட்டால், கல்விச் சீர்திருத்தங்கள் பலனளிக்காது எனவும் சாகல ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
மாத்தறை கொடபொல இலுக்பிடிய கனிஷ்ட பாடசாலை மாணவர்களுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது –
கடந்த காலங்களில், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கு வரிசைகள் ஏற்பட்டன. அந்த நிலையில் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்ற ரணில் விக்ரமசிங்க, பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்கும் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி இந்நாட்டின் பொருளாதார நிலைமையை குறிப்பிடத்தக்க நிலைக்குக் கொண்டு வர பாடுபட்டார்.
அதற்கு அப்பால் இலங்கையின் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு புதிய வேலைத்திட்டம் அவசியம். அதற்காக ஜனாதிபதி தற்போது பல சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றார்.
இலங்கை மத்திய வங்கி சுயாதீனமான நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது. மத்திய வங்கி விவகாரங்களில் இனி அரசியல்வாதிகள் தலையிட முடியாது என்பதே இதன் பொருள். மத்திய வங்கி நாட்டுக்கும் மக்களுக்கும் பொறுப்புக் கூற வேண்டும். மேலும், ஒவ்வொரு நிறுவனமும் நாட்டுக்கும் மக்களுக்கும் பொறுப்புக் கூற வேண்டும். அதற்குத் தேவையான சட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு செயற்படாத நிறுவனங்களின் தலைவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.
அத்துடன், நாட்டின் அனைத்து பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்வதற்கான பொருளாதார வேலைத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரதேசத்திற்கும் தனித்துவமான முறைகளின் மூலம் அந்தப் பிரதேசத்தின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டில் தெனியாயவுக்கும் விசேட இடம் உண்டு. சுற்றுலாத் துறையிலும் தேயிலைத் தோட்டத் தொழிலிலும் தெனியாயவுக்கு அதிக வாய்ப்புகள் காணப்படுகிறது. அதற்கேற்ப இப்பகுதி மக்களுக்கும் செலவுக்கு ஏற்ற வருமானம் பெறும் பின்னணியை தயார் செய்து வருகிறோம்” என சாகல ரத்னாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|