புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியீடு!

Saturday, October 16th, 2021

கடந்த நள்ளிரவுமுதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை பொது நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து அரசாங்கத்தினால் சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தனவினால் இந்த சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நாட்டினுள் கொவிட் பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் குறிப்பிடத்தக்க அளவில் கொவிட் பரவல் இன்னும் காணப்படுவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, வர்த்தக நிலையங்கள், சில்லறை வர்த்தக நிலையங்கள், மருந்தகங்கள், சிறப்பு அங்காடிகள் மற்றும் வீட்டுப் பொருள் விற்பனை நிலையங்கள் என்பனவற்றில் ஒரு சந்தர்ப்பத்தில் மொத்த கொள்ளளவில் 20 சதவீதமானோருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட வேண்டும்.

குறித்த இடங்களில் அனுமதிக்ககூடிய நபர்களின் எண்ணிக்கை வெளியே காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

வங்கிகள், நிதி நிறுவனங்கள், அடகு பிடிப்பு நிலையங்களில் ஒரு சந்தர்ப்பத்தில் 5 பேரை மாத்திரம் அனுமதிக்க முடியும் என்பதுடன் ஏனையோர் குறித்த இடங்களுக்கு வெளியே சமூக இடைவெளியை பேணியவாறு வரிசையில் நிற்க வேண்டும்.

வீட்டிலிருந்து தொழிலுக்காக, மருத்துவ தேவைகளுக்காக மற்றும் அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வீட்டுக்குள் நடத்தப்படும் விருந்துபசார நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்து வகையான உள்ளக மற்றும் வெளியக விருந்துபசாரங்களுக்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருமண மண்டபங்களில் 50 நபர்களுக்கு மேற்படாத வகையில் அல்லது மண்டப கொள்ளளவில் 25 சதவீதமானோரை உள்ளடக்கியதாகத் திருமண வைபவங்களை நடத்த முடியும்.

கட்டுமாண தளங்களின் பணிகளை சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய முன்னெடுக்க முடியும்.

விவசாய நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிகையலங்கார நிலையம், அழகுக்கலை நிலையங்களில் முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்க முடியும்.

திரையரங்குகளில் ஒரு சந்தர்ப்பத்தில் மொத்த கொள்ளளவில் 25 சதவீதமானோருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மரண சடங்குகளில் கலந்துகொள்ள ஒரே தடவையில் 20 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வழிபாட்டுத் தலங்கள், கூட்டு வழிபாடு மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை.

பாடசாலைகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கல்வி அமைச்சின் தீர்மானத்துக்கு அமைய 200க்கும் குறைவான மாணவர்களின் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகளை முதல் கட்டமாகத் திறக்க முடியும்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவகங்களை சுகாதார வழிகாட்டலுக்கு அமைய ஆரம்பிக்க முடியும்.

முன்பள்ளிகளை 50 சதவீத மாணவர் கொள்ளளவை கொண்டு முன்னெடுக்க முடியும்.

பகல் நேர சிறுவர் பராமரிப்பு நிலையங்களைத் திறக்க அனுமதி.

பொருளாதார மத்திய நிலையங்கள் மொத்த விற்பனைக்காக அனுமதிக்கப்படுவதுடன், பிரதேச குழுக்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் அவை இயங்க வேண்டும்.

திறந்த சந்தைகள் மற்றும் வாராந்த சந்தைகள் என்பனவும் பிரதேச குழுக்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் இயங்க வேண்டும்.

உணவகங்களில் உணவு விநியோகத்திற்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நடமாடும் வர்த்தகங்கள் பிரதேச குழுக்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் இயங்க வேண்டும்.

Related posts: