நாளை பாடசாலைகள் ஆரம்பம் – ஆசிரியர் தனது பாடவேளை ஆரம்பமாவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் சமுகமளிக்க வேண்டும்!

Sunday, June 28th, 2020

நாளையதினம் பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், பாடசாலையின் முதல்வாரம் கொரோனா ஆபத்துக்களைத் தவிர்ப்பதற்காக – மேற்கொள்ளவுள்ள செயற்பாடுகளை – பாடசாலை அதிபரும் ஆசிரியர்களும் கலந்துரையாடி – பாடசாலைகள் மட்டத்தில் தீர்மானங்கள் எடுப்பதற்கான வாரமாகும் என கல்வி அமைச்சு சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது .

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ;-

பாடவேளை 1 மணி நேரமாக திட்டமிடப்படும். இச் சுற்று நிருபத்தின் 02 வது பிரிவில் விடயங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. குறித்த பாட ஆசிரியர் தனது பாடவேளை ஆரம்பமாவதற்கு முன் 30 நிமிடங்களுக்கு முன் பாடசாலைக்கு சமுகமளிக்க வேண்டும். உதாரணமாக – ஒரு ஆசிரியருக்கு 11.00 மணிக்கே முதற்பாடம் ஆரம்பமாகுமாயின் – 10.30 மணிக்கு சென்றால் போதுமானது. அவர் காலை 7.30 மணிக்கே செல்லவேண்டும் என்ற அவசியமில்லை.

அத்துடன் – பி.ப 3.30 மணிவரை கற்பிக்கும் தேவை ஏற்படுமாயின் ஒரே ஆசிரியர் வாரத்தின் 5 நாட்களும் ஈடுபடாத வகையிலேயே நேரசூசி தயாரிக்கப்படவேண்டும்.

வாரத்தில் 1 நாள் ஒரு ஆசிரியர் 3.30 மணிவரை நிற்கக்கூடியவாறே நேரசூசி தயாரிக்கலாம். இதனை அடிப்படையாகக் கொண்டு 3.30 மணிவரை நிற்க வேண்டிய ஆசிரியருக்கு – அன்றைய தினம் முதல் பாடவேளையை பிந்திய நேரமொன்றுக்கு வழங்கி நடைமுறைப்படுத்துவது தொடர்பாகத் திட்டமிடலாம்.

இந்தத் திட்டமிடலுக்காகவே – முதல்வாரம் ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் தரப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் கலந்துரையாடி ஆரோக்கியமாக நேரசூசி தயாரித்து கற்பித்தலைத் திட்டமிடவேண்டும்.

பாடசாலை மட்டங்களில் இத்தகைய விடயங்களைத் திட்டமிடலாம் என சுற்றுநிருபம் கூறுகிறது. இந்த திட்டமிடலில் எல்லா பாடசாலைகளுக்கும் பொதுவான பொதுக்கட்டமைப்பு உருவாக்கத்தேவையில்லை. ஆசிரிய ஆளணியைப் பொறுத்து தனித்தனியாக திட்டமிடலாம்.

இந்த நடைமுறைகளுக்காகவே – தனியான ஆவணமொன்றில் கையொப்பமிட இந்தச் சுற்றுநிருபம் கூறுகிறது.

லீவு எடுப்பதாக இருந்தால் – குறித்த ஆசிரியரின் பாடவேளைக்கு பதிலீட்டு ஆசிரியரை வழங்கி லீவு எடுக்கவும் இந்த சுற்றுநிருபம் அனுமதிக்கிறது. என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் ஆ.தீபன் திலீசன் தெரிவித்துள்ளார் .

Related posts: