நாட்டில் மேலும் மூவர கொரோனாவால் உயிரிழப்பு!

Thursday, April 8th, 2021

நாட்டில் மேலும் 3 கொவிட் 19 மரணங்கள் நேற்று பதிவாகின. இதற்கமைய, நாட்டில் இதுவரை பதிவாகிய கொவிட் 19 மரணங்களின் மொத்த எண்ணிக்கை 591 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 89 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் வைத்து கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

குருதி விஷமானமை, கொவிட்19 தொற்றால் ஏற்பட்ட பக்றீரியா தொற்று, மோசமடைந்த சிறுநீரகம் மற்றும் இதய நோய் காரணமாக அவர் உயிரிழந்துள்ளாரென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், தனமல்வில பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஆண் ஒருவருக்கு ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்றுறுதியானது.

அதன்பின்னர் அவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

கொவிட் 19 நியுமோனியா மற்றும் மாரடைப்பு என்பன அவரது மரணத்திற்கான காரணங்களாகும்.

இதேவேளை, ஹெட்டிபொல பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவர் பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 3 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

கொவிட் 19 நியுமோனியா, சிறுநீரக நோய், உயர் குருதி அழுத்தம், இதய நோய் என்பன அவரது மரணத்திற்கான காரணங்களாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: