டிக்டொக் காதலால் விபரீதம் – விபசாரத்தில் தள்ள முயற்சி – தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த மனைவி!

Monday, July 10th, 2023

டிக்டொக் காதல் மனைவியை விபசாரத்தில் தள்ள முற்பட்டதால், மனைவி தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் கடந்த வருடம் டிக்டொக் ஊடாக சீதுவை பகுதியை சேர்ந்த இளைஞனுடன் காதல் வசப்பட்டுள்ளார்.

அந்நிலையில் , பாடசாலை கல்வியை கைவிட்டு , வீட்டை விட்டு வெளியேறி சீதுவைக்கு சென்று காதலனை திருமணம் முடித்துள்ளார்.

திருமணமாகி சில வாரங்களில், சீதுவைச் சேர்ந்த குறித்த இளைஞன் தனது காதல் மனைவியை பணத்துக்காக விபசாரத்தில் தள்ள முயன்றுள்ளார்.

அதனை அடுத்து குறித்த பெண் அங்கிருந்து தப்பித்து யாழ்ப்பாணம் திரும்பி பெற்றோருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சீதுவை இளைஞன் மாணவியை தொடர்பு கொண்டு தன்னிடம் வருமாறும் இல்லை எனில், திருமணமான பின்னர் இருவரும் மிக நெருக்கமாக எடுத்து புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார்.

அதனால் விரக்தியடைந்த குறித்த பெண் தவறான முடிவெடுத்து, தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில், உறவினர்களால் காப்பாற்றப்பட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: