இலங்கையின் பிரதான 09 வங்கிகளின் வலிமைத்தன்மையை பரிசீலிக்க மத்திய வங்கி தீர்மானம்!

Friday, October 7th, 2022

இலங்கை வங்கி, மக்கள் வங்கி உள்ளிட்ட பிரதான 09 வங்கிகளின் வலிமைத்தன்மையை பரிசீலிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

அரச மற்றும் தனியார் வங்கிகளின் பிரதானிகளுடன் கடந்த நான்காம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

தற்போது வங்கி கடன்களுக்காக விதிக்கப்படுகின்ற அதிக வட்டிவீதங்களுக்கு அமைய கடன்களில் ஏற்பட்டுள்ள பிரதிகூலங்கள் மற்றும் அனுகூலங்கள் தொடர்பில் இந்த பரிசீலனை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக வங்கிகளில் மேற்கொள்ளப்படும் வெளிப்புற கணக்காய்வினை போன்று அல்லாது மாறுப்பட்ட முறையில் இந்த கணக்காய்வு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்திற்காக பல நிதித்துறை சீர்திருத்தங்கள், வலுவான மற்றும் போதுமான மூலதனமயமாக்கப்பட்ட வங்கி அமைப்பை நிறுவுதல் மற்றும் திருத்தப்பட்ட வங்கிச் சட்டம் உட்பட பல நிபந்தனைகள் முன்மொழியப்பட்டுள்ளன. இதற்கமையவே இந்த பரிசீலனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதேவேளை, அரச மற்றும் தனியார் வங்கிகளிடமிருந்து அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ள கடனின் மொத்த பெறுமதி 13 ட்றில்லியன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: