அவசியமின்றி வெளியில் செல்ல வேண்டாம் – பொது மக்களிடம் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதானி கோரிக்கை!

Wednesday, July 15th, 2020

கொரோனா தொற்று சமூகத்திற்கு பரவுவதற்கு அதிக ஆபத்துக்கள் உள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஏதாவது ஒரு வகையில் கொரோனா சமூகத்திற்குள் பரவினால்  அது பாரிய ஆபத்தான நிலையை உருவாக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெலிசர கடற்கடை முகாமில் கடற்படையினருக்கு கொரோனா தொற்றிய போது நாடு மூடப்பட்டிருந்தது. ஆனால் கந்தகாடு புனர்வாழ்வு நிலையம் ஊடாக ஏற்பட்டுள்ள கொரோனா கொத்தினை கட்டுப்படுத்தும் போது நாடு திறக்கப்பட்டிருக்கின்றமையினால் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் கடும் அவதானத்துடன் இருப்பது அவசியமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்டுள்ள நிலைமையுடன் அங்கு விடுமுறை பெற்று வீடுகளுக்கு சென்ற ஊழியர்கள், பாடசாலைகள், கூட்டங்கள் உட்பட பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளமையினால் அவர்களுடன் பழகியவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும்.

தொற்றாளர்களினால் வைரஸ் சமூகத்திற்குள் இலகுவாக பரவக்கூடும். இதுவரையில் சமூகத்திற்குள் பரவிய கொரோனா நோயாளிகள் ராஜாங்கன யாய உட்பட 6 பிரதேசங்களிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போதைய நிலைமைக்கமைய வைரஸ் சமூகத்திற்குள் தீவிரமாக பரவுவதற்கு அதிக ஆபத்துக்கள் உள்ளது. இதன் காரணமாக மக்கள் பயணங்களை குறைத்துக் கொள்வது கட்டாயமாகும். அத்தியாவசிய விடயங்களை தவிர்த்து பயணங்கள் மேற்கொள்வதனை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ள அவர் எங்களிடம் சிறியளவு வளங்களே உள்ளது. வைரஸ் சமூகத்திற்கு பரவினால் வைத்தியசாலைகள் போதாது. அதேபோல் தீவிர சிகிச்சை பிரிவும் போதாது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: