அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு – பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவிப்பு!

Monday, April 19th, 2021

நாடு முழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்கள் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் நினைவாக தேவாலயங்களில் விசேட ஆராதனை நிகழ்வுகள் மற்றும் மத நிகழ்ச்சிகள் நாளை மறுநாள் (21) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள காரணத்தால் இவ்வாறு பாதுகாப்பு வழங்கவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெறவுள்ள விசேட ஆராதனை நிகழ்வுகள்  காரணமாக, தேவாலயத்திற்கு அருகிலுள்ள சில வீதிகளில் நாளை (20) மாலை 4 மணிமுதல் மறுநாள் (21) நண்பகல் 12 மணிவரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புனித அந்தோனியார் மாவத்தை, ராமநாதன் மாவத்தை மற்றும் கிறிஸ்டி பெரேரா மாவத்தை ஆகிய இடங்களில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் நாடளாவிய ரீதியில் அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் எதிர்வரும் 21 ஆம் திகதி விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related posts: