நாராஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையில் கைக்குண்டு விவகாரம் – சந்தேகத்தில் ஒருவர் கைது என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிப்பு!

Wednesday, September 15th, 2021

கொழும்பு நாராஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் திருகோணமலையைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள அமைச்சர் சமல் ராஜபக்க்ஷ மற்றும் விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரணவும் கைக்குண்டு மீட்கப்பட்ட கொழும்பு நாராஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், இவர்களில் எவரையாவது இலக்கு வைத்து குறித்த கைக்குண்டு கொண்டுவரப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணைகள் நடத்தப்படுவருகின்றது.

வைத்தியசாலையில் பொருத்தப்பட்டுள்ள CCTV கமரா காணொளியின் ஊடாக நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் கைக்குண்டை கொண்டு வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை – உப்புவெளி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் செய்யப்பட்டுள்ள தமிழ் இளைஞன், வைத்தியசாலைக்கு அருகாமையில் கட்டட நிர்மாணப் பணிகளில் கடமையாற்றி வந்துள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம்  தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞன் மேலதிக விசாரணைகளுக்காக குற்றத் தடுப்பு பிரிவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைக்குண்டின் பாதுகாப்பு ஆணியை கழற்றி, நுளம்பு சுருளொன்றை இணைத்து, வெடிக்கும் வகையில் இந்த கைக்குண்டு தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: