வடக்கு கிழக்கு கடற்றொழில்சார் அபிவிருத்திக்கு உதவ வேண்டும். – நோர்வேயிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்!

Friday, December 13th, 2019


மீன்பிடித் துறையை விருத்தி செய்வதற்கான அதிகளவான முதலீடுகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் வரவேற்பதாகவும், குறிப்பாக கடற்றொழில்சார் செயற்பாடுகளில் பின்தங்கியிருக்கும் வடக்கு கிழக்கு பிரதேசங்களின் அபிவிருத்திக்கு பாரிய திட்டங்களை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நோர்வே அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்

கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்த இலங்கைக்கான நோர்வே தூதுவர் றைனா ஜொனான்லி எஸ்கெட்ல் தலைமையிலான குழுவினரிடம் கௌரவ அமைச்சரினால் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இன்று(13.12.2019) நடைபெற்ற குறித்த சந்திப்பில், நாடளாவிய ரீதியில் கடற்றொழில் சார் அபிவிருத்திக்கு நோர்வே மேற்கொண்டு வருகின்ற வேலைத் திட்டங்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் அவர்கள், எதிர்காலத்தில் அவை மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.

இதன்போது கருத்துதெரிவித்த நோர்வே தூதுவர், இலங்கையில் படகு கட்டும் தொழில் துறையிலும் அதேபோன்று நன்னீர் மற்றும் குளம், களப்பு போன்ற நீர் நிலைகளில் கடல் உற்பத்திகளை அதிகரிப்பது தொடர்பாக ஆர்வம் செலுத்தி வருவதாக தெரிவித்ததுடன்  குறித்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் தனியார் முதலீட்டாளர்களை அழைத்து வருவதற்கும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஏற்கனவே வேலைத்திட்டம் ஒன்றை காரைநகர் பகுதியில் ஆரம்பிக்க திட்டமிட்டிருப்பதாகவும் முதற்கட்டமாக பிடிக்கப்படுகின்ற மீன்கள் பழுதடையாமல் பாதுகாக்கும் வகையிலான தொழில்நுட்பம் உள்ளடக்கப்பட்ட  மீன்பிடிப் படகுகள் கட்டுவதற்கு திட்டமிட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஏற்கனவே தொழில்சார் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ள நிலையில், வடக்கு கடல்களில் பரீட்சார்த்த முயற்சியாக முதற் கட்டமாக 10 படகுகளை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறித்த முயற்சி வெற்றியளிக்கும் பட்சத்தில் குறித்த படகுகளை ஏற்றுமதி செய்யும் திட்டங்களும் இருப்பதனால் நூற்றுக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்த முடியும் என நம்புவதாகவும் மேலும் தெரிவித்தார்.

நோர்வே அரசாங்கத்தின் குறித்த திட்டத்தினை வரவேற்ற கௌரவ அமைச்சர் டகளஸ் தேவானந்தா அவர்கள், குறித்த திட்டத்தினை உடனடியாக ஆரம்பிக்குமாறும் அதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்கத் தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Related posts:

இன நல்லிணக்கத்திற்கு எதிரானவர்களை நாம் என்றும் ஏற்றுக்கொண்டது கிடையாது - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந...
தமிழர்களின் உரிமைகளுக்கும் உயர்ந்த வாழ்கை தரத்திற்கும ஒரே வழிமுறை ஈ.பி.டி.பி. யின் பொறிமுறைதான் : அம...
நாடாளுமன்றத்தில் எதையும் வாந்தி எடுக்கலாம் என்று சிலர் நினைக்கின்றனர் - நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்த...

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் E.P.D.P.யின் யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பி...
யாழில் கொரோனாவின் இரண்டாவது அலையை தடுப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துள்ள விஷேட...
நாரா நிறுவனத்தின் செயற்பாடுகளை மேலும் வினைத் திறனாக முன்கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் அம...