வடக்கில் கடற்றொழில் மேம்பட்டால்  பொருளாதாரத்திற்கு பங்களிப்பாக அமையும் – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, June 21st, 2017

எமது நாட்டைப் பொறுத்த வரையில், சர்வதேச கடற் பரப்பில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சுமார் 1600 மீன்பிடிப் படகுகளுக்கே சர்வதேச டூனா ஆணைக்குழு அனுமதிகள் உள்ளதெனத் தெரிய வருகின்றது. எனினும், இந்தப் படகுகள் அனைத்தும் சர்வதேச கடற் பரப்பில் தொழிலில் ஈடுபடுகின்றனவா? என்பது தொடர்பில் உடனடி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும். அவ்வாறு தொழிலில் ஈடுபடாத படகுகளுக்கான அனுமதிகள் இரத்துச் செய்யப்பட்டு, புதிதாக அந்த அனுமதிகளைப் பெறக் காத்திருக்கும் கடற்றொழிலாளர்களின் படகுகளுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டு, அத் தொழில் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதையும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (20) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஏற்றுமதி, இறக்குமதி கட்டளைச் சட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். இவ்வடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்

அதே போன்று வடக்கு மாகாணத்தின் கடற்றொழில்த் துறை தொடர்பிலும் முக்கிய அவதானங்கள் செலுத்தப்பட வேண்டியத் தேவையுள்ளது. அதனை மேலும் நவீன முறையில் கட்டியெழுப்புவதன் ஊடாக எமது நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரியளவிலான பங்களிப்பினை அதன் மூலமாகப் பெற முடியும். குறிப்பாக, பெறுமதி சேர் கடலுணவு உற்பத்திகளுக்கான முயற்சிகளை வடக்கில் நவீன வசதிகளுடன் ஏற்படுத்துவதன் ஊடாக சிறந்த பயன்களை பொருளாதார ரீதியிலும், தொழில்வாய்ப்புகள் என்ற வகையிலும் பெற முடியும்.

அதே நேரம், சிறு வேளாண்மை உற்பத்திகள் ஏற்றுமதிகள் தொடர்பிலும் 2015ஆம் ஆண்டில் எமது நாட்டுக்குக் கிடைத்துள்ள வருமானத்தில் கடந்த ஆண்டு 46.3 வீதமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. இதற்கு, எமது நாட்டில் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்ற வரட்சி மற்றும் ஏனைய கால நிலை மாற்றங்கள் காரணமாகக் கூறப்பட்டாலும், எமது நாட்டின் வேளாண் துறை குறித்தும் ஒரு மந்தமான கொள்கை நிலைப்பாடே தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவது தெரிய வருகின்றது. இதன் காரணமாக இன்று வேளாண்மை துறை சார்ந்த உற்பத்திகளும் இறக்குமதி செய்யப்படுகின்ற நிலையில், இது மேலும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் எதிர்காலத்தில் ஏற்படும். இது தொடர்பிலும் உரிய அவதானங்கள் செலுத்தப்படுவது ஆரோக்கியமானது.

Related posts:


எமக்கு கிடைத்த சபைகளை வினைத்திறன் மிக்க சபைகளாக வழிநடத்தி செல்வோம் - ஊர்காவற்றுறையில் டக்ளஸ் தேவானந்...
மாகாண சபை முறையாக நிர்வகிக்கப்பட்டிருந்தால் எமது மக்களின் வறுமை இல்லாது போயிருக்கும் - செயலாளர் நாயக...
பனைசார் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வை பெற்றுத்தாருங்கள் – அமைச்சர் டக...