மக்கள் நிம்மதியுடன் வாழும் சூழல் தோற்றுவிக்கப்படும் வரை எமது அரசியல் பயணம் தொடர்ந்து பயணிக்கும் – மன்னாரில் டக்ளஸ் எம்.பி!
Monday, January 22nd, 2018
எமது மக்கள் எப்போதும் நிம்மதியுடன் கூடிய ஒர் இயல்பான வாழ்க்கையை வாழக்கூடியதான சூழல் தோற்றுவிக்கப்படும் வரையில் எவ்விதமான இடர்பாடுகளை எதிர்கொண்டாலும் எமது அரசியல் பயணம் தொடர்ந்து பயணிக்கும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மன்னார் பள்ளிமுனை பகுதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
கடந்தகாலங்களில் என்மீதும் எனது கட்சி மீதும் அவதூறுகளைப் பரப்பும் வகையில் இந்நாட்டில் நடைபெற்ற பல்வேறு கொலைச் சம்பவங்கள் சுமத்தப்பட்டன.
அந்த நேரங்களில் எல்லாம் நாம் மிகுந்த வேதனையடைந்திருந்தேன். ஆனாலும் வரலாறு எம்மை விடுவிக்கும் என்ற நம்பிக்கையில் நாம் உறுதியுடன் இருந்தோம். அதன் அடிப்படையில் இன்று இந்நாட்டில் நடைபெற்ற கொலைச் சம்பவங்களின் உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பதை நீதிமன்ற விசாரணைகளூடாக வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன
அதுமாத்திரமன்றி அந்த அபாண்டமான பொய்க்குற்றச் சாட்டுக்களிலிருந்து வரலாறு எம்மை விடுவித்துவருகின்றது.
இதுபோன்றுதான் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் காலத்திலும் கூட எமது கட்சியின் வெற்றிக்கு பாதகம் ஏற்படுத்தும் வகையில் சில தமிழ் ஊடகங்களும் தமிழ் அரசியல் வாதிகளும் திட்டமிட்ட வகையில் அபாண்டமான பழிகளைச் சுமத்திவருகின்றனர்
அவர்கள் எம்மீது பழிசுமத்துவதான இந்த செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் தெளிவான உண்மைகளையும் யதார்த்தத்தையும் புரிந்துகொள்ளவேண்டும் என்பதே எமது விருப்பாகும்.
மன்னார் மாவட்டத்தில் வாழுகின்ற மக்களாகிய நீங்களும் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றீர்கள் என்பதை நான் நன்கறிவேன். அந்த பிரச்சினைகள் யாவற்றுக்கும் உண்மையிலேயே தீர்வுகள் கிடைக்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்
அந்த அடிப்படையில் இங்கு முன்வைக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வுகளை பெற்றுத்தருவதற்கு உள்ளூராட்சி மன்ற தேர்தலை மக்கள் சரியாக பயன்படுத்துவதனூடாகவே சாத்தியமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|