மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் வகையில் பணி தொடரும்: கடமைகளைப் பொறுப்பேற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!

Thursday, August 13th, 2020

அரசியல்வாதி என்ற அடிப்படையிலும் அமைச்சர் என்ற வகையிலும் இரண்டு வகையான பொறுப்புக்கள் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவை இரண்டையும் நிறைவேற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்தார்.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சு அலுவலகத்தில் இன்று (13.08.2020) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ‘அமைச்சர் என்கின்ற வகையில் நாடளாவிய ரீதியில் சுமார் 15 மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்ற கடற்றொழிலாளர்கள் தொடர்பான விவகாரங்களில் அவதானம் செலுத்த வேண்டியிருப்பதுடன், நன்னீர் நிலைகளில் நீர் வேளாண்மையை விருத்தி செய்வது தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் பாரிய எதிர்பார்ப்புடன் குறித்த அமைச்சினை வழங்கியுள்ள நிலையில், அவர்களின் நம்பிக்கையையும் மக்களின் எதிர்பார்ப்பினையும் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது’ என்று அமைச்சர் தெரிவித்தார்.

அதேபோன்று, ஒரு அரசியல்வாதி என்ற வகையில் எதிர்பார்ப்புக்களுடன் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட தான், தமிழ் பேசும் மக்கள் எதிர்கொள்ளுகின்ற அன்றாடப் பிரச்சினை – அபிவிருத்தி – அரசியல் தீர்வு ஆகிய விடயங்களுக்கும் தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

எனவே, தற்போது நாட்டில் அமைந்துள்ள நிலையான அரசாங்கத்தின் ஊடாக, பொருத்தமான சூழலை உருவாக்குதல் மற்றம் உருவாகின்ற சூழலை பயன்படுத்துதல் என்ற தன்னுடைய நீண்ட நாள் கோட்பாட்டின் அடிப்படையிலுல் தென்னிலங்கை கட்சிகளுடன் கட்டியெழுப்பியுள்ள தேசிய நல்லிணக்கத்தின் ஊடாகவும் தன்னிடம் வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தேசிய நல்லிணக்கம் என்னும் விதையை  மாணவர்களிடையே விதைக்க வேண்டும் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா...
வசதிகளும் வாய்ப்புகளும் எமது இளைஞர்களுக்கு கிடைக்கின்றபோது அவர்களால் பல சாதனைகளை நிலைநாட்டமுடியும் –...
யாழ் பல்கலை முகாமைத்துவ உதவியாளர் வெற்றிடங்கள் சுற்றறிக்கையின் பிரகாரமா நிரப்பப்படுகின்றன.– நாடாளுமன...