தொல்பொருள் திணைக்களம் தமிழ் மக்களுக்குத் தொல்லை தரும் திணைக்களமாக மாறியுள்ளது – எம்.பி. டக்ளஸ் தேவானந்தா!

Thursday, September 20th, 2018

எமது மக்கள் வடக்கு மாகாணத்தில் இருவேறு தரப்புகளினால்; ஆக்கிரமிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஒரு புறத்தில் படைகள் உள்ளிட்ட அரச திணைக்களங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளனர். மறுபுறத்தில், வடக்கு மாகாண சபையின் ஆட்சியினை ஏற்றிருக்கின்ற தரப்பினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளனர்.

படைகளின் ஆக்கிரமிப்பு என்கின்றபோது, எமது மக்களின் சொந்த காணி, நிலங்கள், பொருளாதார கேந்திர இடங்கள், பொருளாதார முயற்சிகளுக்கான வாய்ப்புகள் என்பன அடங்குகின்றன.

அரச திணைக்களங்கள் என்கின்றபோது, வனப் பாதுகாப்புத் திணைக்களம், வன ஜீவ ராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகார சபை என்பன எமது மக்களின் காணி, நிலங்கள் மற்றும் வணக்க வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட பொருளாதார முயற்சிகளுக்கான வளப் பகுதிகளையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன.

தொல்பொருள் திணைக்களம் என்பது வடக்கு, கிழக்கு மக்களுக்கு இன்று தொல்லை தரும் திணைக்களமாக மாறிவிட்டுள்ளது. இத் திணைக்களத்தினர் கூறுவதைப் பார்க்கப்போனால், இந்த நாட்டில் இன்னும் குறுகிய காலத்திற்குள் மக்கள் எவருமே வாழ முடியாத நிலை ஏற்பட்டு, வெறும் தொல்பொருட்கள் மட்டுமே அடங்கிய நாடாக இது மாறிவிட்டாலும், ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றே தோன்றுகின்றது.

வடக்கு மாகாண சபை ஆட்சியாளர்களது ஆக்கிரமிப்பு என்பது, எமது மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அனைத்தையும் கிடைக்க விடாமல், தடுத்து வருவதும், எமது மக்களின் நிதி வளங்களை தாங்கள் மட்டும் அனுபவித்தும், கொள்ளையடித்தும் வருவது ஆகும். வடக்கு மாகாணத்;தின் வறுமை நிலைக்கு முக்கிய காரணங்கள் இவைதான் என்றே கருதுகின்றேன் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளை, மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான கட்டளைகள், பொருளாதார சேவை விதிப்பனவு மற்றும் பெறுமதி சேர் வரி தொடர்பிலான சட்டமூலங்கள் தொடர்பில் இடம்பெறுகின்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts:

அனுராதபுரம் மொரவெவ கிராம மக்களது தேவைகள் பூர்த்திசெய்யப்பட வேண்டும்! நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்...
டொரிங்டன் தோட்ட, கல்மதுரை மக்களின் குடியிருப்பு பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா வலி...
இலஞ்சம் ஊழல் எழுதப்படாத சட்டமாகவே இருக்கின்றது - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்...