தனிப்பட்ட குரோத மனப்பான்மைகளை முன்னெடுத்து வருவதால் எவ்விதமான நலன்களும் நாட்டுக்கும் மக்களுக்கும் கிடைக்கப் போவதில்லை. – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
Friday, February 9th, 2024குறுகிய அரசியல் சுயலாப நோக்கங்களையும், தனிப்பட்ட குரோத மனப்பான்மைகளையும் முன்னெடுத்து வருவதால் எவ்விதமான நலன்களும் இந்த நாட்டுக்கோ, நாட்டு மக்களுக்கோ கிட்டப் போவதில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை தொடர்பில் நாடாளுமன்றில் இன்றையதினம் (09.02.2024) கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இச்சாறு தெரிவித்திருந்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில் –
இந்த நாடு பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து இன்னமும் முழுமையாக மீட்சிப் பெறவில்லை. முழுமையான மீட்சியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றது. இதன்போது வலிகள் – வேதனைகள் என்பன தவிர்க்க முடியாதவை. கரடு முரடான பாதையைக் கடக்க வேண்டுமென்றால் இவற்றையெல்லாம் எதிர்கொண்டாகவேண்டும்.
அந்த வகையில் இன்றும் எமது மக்களுக்கான வேதனைகள் இல்லாமல் இல்லை. வெளியில் தெரிகின்ற வகையிலும், வெளியே தெரியாத வகையிலும் எமது மக்களில் பெரும்பாலானவர்கள் தங்களது வாழ்க்கையினை முன்னெடுப்பதில் பல சிரமங்களுக்கு, பாதிப்புகளுக்கு உட்பட்டே வாழ்ந்து வருகின்றனர்.
அதேநேரம் இன்று அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களும் தடையின்றி கிடைக்கப் பெற்றாலும், அவற்றின் விலைகளில் பாரிய அதிகரிப்புகள் காணப்படுகின்றன.
இன்னும் ஓரிரு வருடங்கள் இதனை சகித்துக் கொண்டால், ஒரு முன்னேற்றமான நல்ல நிலையினை நாம் பெற்றிட முடியும் என்ற நம்பிக்கையை ஜனாதிபதி அவர்களின் செயற்பாடுகள் எடுத்துக் காட்டி வருகின்றன.
அந்த வகையில்தான் ஜனாதிபதி அவர்களுக்கு ஒத்துழைப்பினை வழங்குவதன் மூலம் இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் நல்ல நிலைக்குக் கொண்டு வர முடியும் எனப்தை நான் வலியுறுத்தி வருகின்றேன் எனவும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|