இளைஞர் வணிகக் கிராமம் திட்டத்துக்கு கிளிநொச்சி தெரிவு: ஜனாதிபதிக்கு அமைச்சர் டக்ளஸ் நன்றி தெரிவிப்பு!

Thursday, May 20th, 2021

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் எண்ணத்தில், பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இளைஞர் வணிகக் கிராமம் நிகழ்ச்சித் திட்டத்துக்கு கிளிநொச்சி மாவட்டம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்குபாரிய பங்களிப்பை வழங்கக் கூடிய குறித்த திட்டத்தின் முதலாவது கட்டத்திலேயே கிளிநொச்சியை தெரிவு செய்தமைக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 25 மாவட்டங்களிலும், அந்தந்த மாவட்டங்கள், பிரதேச செயலக பிரிவுகளில் இருக்கக்கூடிய வளங்களை முதன்மைப்படுத்தி, அந்தந்த மாவட்ட இளைஞர்களுக்கு, அவர்கள் வாழும் மாவட்டங்களிலேயே வேலைவாய்ப்பை வழங்கி மாவட்டத்தினதும், நாட்டினதும் உள்நாட்டு உற்பத்திக்கான பங்களிப்பை உயர்த்தும் நோக்கில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

தொழிற்பேட்டைகளை பொதுவாக நாட்டின் ஒரு பகுதியில் ஆரம்பித்துவிட்டு இளைஞர்களை அவை அமைந்துள்ள இடங்களை நோக்கி வேலைவாய்ப்புக்கு ஈர்ப்பதைவிட, அந்தந்த மாவட்டங்களின் பொருளாதார வளங்களின் அடிப்படையில் அங்கேயே தொழிற்பேட்டைகளை உருவாக்குமாறு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பது அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் இந்தத் திட்டத்தின் அடிப்படை அம்சமாகும்.

அவ்வாறு தொழில் முயற்சிகள் அந்தந்த மாவட்டங்களின் பொருளாதார வளங்களை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்படும்போது, அதற்குத் தேவையான தொழில் திறன் பயிற்சிகளை வழங்கி, அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்களை அங்கேயே வழங்க முடியும் என்பது அவரது முன்மொழிவு.

அவரது இந்த யோசனை, மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் வேலைத்திட்டத்தின்கீழ் அது உள்வாங்கப்பட்டிருந்தது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தளவு பங்களிப்பை வழங்கும் மாவட்டங்கள் சிலவற்றை முதற்கட்டமாக இதற்குத் தெரிவுசெய்வது என்ற முடிவின் அடிப்படையில் மொனராகல, பொலனறுவை மற்றும் கிளிநொச்சி ஆகிய 3 மாவட்டங்கள் முதலில் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதி செயலணியின் பிரதான வழிநடாத்தல் அதிகாரி நிஹால் சோமவீர அவர்களால் இந்தத் திட்டம் ஒருங்கிணைக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தைச் செயற்படுத்துவதற்கென கிளிநொச்சி மாவட்டத்தில் 200 ஏக்கர் காணியையும், திட்டத்தின்மூலம் தொழில்வாய்ப்புப் பெறும் இளைஞர்களின் குடும்பங்களை குடியேற்றுவதற்கென அதற்கருகாக 20 ஏக்கர் காணியையும் அடையாளப்படுத்துமாறு, பிரதம அமைச்சரின் மேலதிக செயலாளரும், பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் இணைச் செயலாளருமான அன்டன் பெரேரா கிளிநொச்சி மாவட்டச் செயலாளரை எழுத்து மூலம் கோரியுள்ளார்.

இந்தத் திட்டம் ஊடாக வறுமையை குறைத்தல் மற்றும் மின்வணிகம் ஊடாக(e-commerce) சமூக பொருளாதார அபிவிருத்தியை நோக்கி இளைஞர்களை ஈடுபடுத்துவது பிரதான நோக்கமாகும் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அவர்,

வறுமையைக் குறைப்பதற்கு உதவிகளை வழங்குகின்ற வெளிநாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் ஒத்தழைப்பையும் இதன்மூலம் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்படி, கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான பொருளாதார செயற்பாடுகளாக இருக்கும் விவசாயம், கடற்றொழில் ஆகியவற்றுக்கு முதன்மையளிக்கும் வகையில் இதற்கான காணிகளை, கரைச்சி(விவசாயம்), பூநகரி(மீன்பிடி), பச்சிலைப்பள்ளி(தெங்கு உற்பத்தி) ஆகிய இடங்களில் அடையாளப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மாவட்டச் செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன் அவர்களை அமைச்சர் டக்ளஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts:

தமிழ் மக்களின் அரசியல் உரிமைக் கோரிக்கையின் நியாயத்தை ஏற்றுக்கொள்பவரையே ஈ.பி.டி.பி ஆதரிக்கும்.
நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தில் அமைச்சரவை தீர்மானத்தை அமுல்ப்படுத்துங்கள் - பொலிஸ் மா அதிபருக்கு அமை...
நீர்கொழும்பு கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு - களப்பு அபிவிருத்தியிலும் அமைச்சர் டக்ளஸ் அவதானம்!

சிங்கப்பூருடன் விஷேட வர்த்தக ஒப்பந்தம் ஒன்றுக்கு செல்லவேண்டியதன் அவசியம் என்ன? - நாடாளுமன்றில் செயலா...
தொல்பொருள் திணைக்களம் தமிழ் மக்களுக்குத் தொல்லை தரும் திணைக்களமாக மாறியுள்ளது - எம்.பி. டக்ளஸ் தேவான...
இருப்பதை பாதுகாத்து மேலும் முன்னேறுவதே எமது இலக்கு - தென்மராட்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!