கட்டணம் செலுத்தும் பொதுமக்கள் மின்சாரத்தை வீண்விரயம் செய்வதில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Friday, March 29th, 2019

இன்று இந்த நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் புரையோடிப் போயிருக்கின்ற நிலையில், மின்சாரப் பிரச்சினையும் தற்போது தலைதூக்கி இருக்கின்றது.

இந்த நாட்டில் தற்போதைய இந்த வறட்சி நிலைமை ஆரம்பித்திருந்த காலகட்டத்திலிருந்தே பல ஊடகங்கள்கூட, எதிர்வரும் நாட்களில் மின் தடைக்கு இந்த நாடு உட்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாகக் கூறியிருந்தன. அந்த எச்சரிக்கையினை நீங்கள் கவனத்தில் கொள்ளவில்லை. மாறாக, ஊடகங்களைப் பார்த்து,  கறுப்பு ஊடகங்கள் என வர்ணித்துக் கொண்டிருந்தீர்கள். இறுதியில் இந்த நாடு இன்று இருட்டுக்குள் தள்ளிவிடப்பட்டுள்ளது.

இன்று மக்களைப் பார்த்து, சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கிறீர்கள். மின்சாரத்தை இந்த நாட்டில் வீண்விரயம் செய்வது யார்? எனக் கேட்க விரும்புகின்றேன். சாதாரண பொது மக்களா? அரச நிறுவனங்களா? மின்சாரத்தை மிக அதிகளவில் வீண் விரயம் செய்கின்றார்கள்? என்ற கேள்வியை நீங்களே கேட்டுப் பாருங்கள் என ஈழ மக்கள்; ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்;தா தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பில் நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு, மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகள் தொடர்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்iகில் –

இந்த நாட்டில் மின் தட்டுப்பாடு ஏற்படும் எனத் தெரிந்து கொண்டும், அதைப் பற்றிக் கவலை கொள்ளாமல், இப்போது இரண்டு மின் குமிழ்களை அணைத்து விடுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்துகின்றீர்கள்.

இந்த நாட்டில் வறுமையில் இருக்கின்ற மக்களை அதிலிருந்து மீட்க வேண்டுமென வரவு – செலவுத் திட்டத்தில் கூறுகின்றீர்கள். அதற்கென சமுர்த்தி பயனாளிகளுக்கென 10,000 மில்லியன் ரூபாவை ஒதுக்குகின்றீர்கள். இந்த நாட்டில் கிட்டத்தட்ட 13 இலட்சம் பேர் சமுர்த்திப் பயனாளிகளாகவுள்ளனர். மேலும் 6 இலட்சம் பேரை அதில் இணைக்க வேண்டும் என்றும் கூறுகிறீர்கள்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில், சமுர்த்திகூட இன்றிய நிலையில், பல ஆயிரம் குடும்பங்கள் வறுமை நிலையில் இருக்கின்றன. இவர்களில் மின்வசதி இன்றிய மக்களும் வாழ்கிறார்கள்.  மின் வசதி இருக்கின்ற மக்களும் நாளாந்தம்  ஒன்று அல்லது, இரண்டு மின் குமிழ்களையே பயன்படுத்தக்கூடிய நிலையிலேயே இருக்கிறார்கள். இதே நிலையில்தான் இந்த நாட்டில் பெரும்பாலான மக்களின் நிலைமைகள் இருக்குமென்றே கூற முடியும். அதையும் அணைத்துவிட்டு, இருட்டில் இருக்கச் சொல்கிறீர்களா? என எமது மக்கள் கேட்கின்றனர்.

குளிரூட்டிகளை செயற்படுத்த வேண்டாம் என்கிறீர்கள். இந்த நாட்டில் எத்தனை வீடுகளில் குளிரூட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன? என்ற கேள்வி எழுகின்றது. இன்றிருக்கின்ற விலைவாசிகள், வரி விதிப்புகள் காரணமாக எமது மக்களில் பெரும்பாலானவர்களது வயிறுகள் பற்றி எரிகின்ற நிலையில், எமது மக்களின் வயிறுகளை தளர்விப்பதற்கே எவ்விதமான ஏற்பாடுகளும் இல்லாத நிலையில், மின்சாரத்தை வீண்விரயம் செய்து அதற்கான பணத்தைக் கட்டுவதற்கு அவர்கள் முன்வருவார்களா? அவர்களிடம் அத்தகைய பொருளாதார வசதிகள் இருக்கின்றதா? என கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அரச நிறுவனங்களை எடுத்துக் கொண்டால், அநேகமானவற்றில் மின் பாவனையானது மிக அதிகளவில் வீண் விரயம் செய்யப்பட்டு வருகின்றது. இதை தடுப்பதற்கு நீங்கள் எடுக்கின்ற நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து ஆராய்ந்து பாருங்கள். தேசிய மின் கட்டமைப்பை நிறுத்திவிட்டு, மின் பிறப்பாக்கிகளை பயன்படுத்துமாறு கூறுகிறீர்கள். எரிபொருள் உங்களுக்கு இலவசமாக இறக்குமதியாகின்றதா? எனக் கேட்க விரும்புகின்றேன் என மேலும் தெரிவித்தார்.

Related posts:

தீர்வுகள் எட்டப்படாத நிலைமைக்கு காரணம் மக்கள் சரியானனவர்களை தெரிவு செய்யாமையே காரணம் - டக்ளஸ் தேவானந...
இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வுகள்  முல்லை மாவட்டச் செயலகத்தில்  அமைச்சர்...
யாருடன் கூட்டுச் சேர்ந்தாலும் எமது மக்களின் அபிலாசைகளையே வலியுறுத்துவோம் - வவுனியா மாநாட்டில் செயலாள...

நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மக்களது வாழ்வாதாரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்! - டக்ளஸ் தேவானந்தா...
எமக்கான தீர்வுகளை பெற்றுத்தரும் வல்லமை உங்களிடமே உள்ளது : டக்ளஸ் தேவானந்தாவிடம் நாவாந்துறை மக்கள் சு...
அரசியல் ரீதியில் எதிர்கொள்ளும் திறனற்றவர்களே எம்மீது சேறு வாரிப் பூசுகின்றனர் - அமைச்சர் டக்ளஸ் தேவ...