உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய அரசியல் தலைமையே எமக்கு வேண்டும் – முல்லை மக்கள் ஆதங்கம்!
Sunday, February 12th, 2017
கடந்த காலங்களில் சரியான தலைமைத்துவமும் வழிகாட்டலும் இல்லாத காரணத்தினால்தான் நாம் பல்வேறுபட்ட துன்ப துயரங்களுக்கு ஆளாகியிருந்தோம். எதிர்காலத்தில் இவ்வாறானதொரு அவலத்தை சந்திக்கவும் நாம் தயாராகவில்லை. இந்நிலையில்தான் எமக்கு சரியான வழியைக்காட்டும் வழிகாட்டியாக உங்களை நாம் எதிர்பார்க்கின்றோம் என முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு இன்றையதினம் (12) வருகைதந்து செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுடனான சந்திப்பிலேயே மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்தனர்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
யுத்தம் நிறைவடைந்த இயல்புச்சூழல் ஓரளவிற்கு தோற்றுவிக்கப்பட்டிருக்கின்ற தற்போதைய சூழலிலும் மக்களின் தேவைப்பாடுகள் பிரச்சினைகள் அதிகமாக இருந்து கொண்டேதான் இருக்கின்றன.
இவற்றைத் தீர்த்துவைப்பதாக மக்களிடம் வாக்குறுதி வழங்கிய அரசியல் தலைமைகள் மாகாணசபைத் தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்றிருந்த போதிலும் அவர்கள் மக்களாகிய எங்களது குறைபாடுகளை தீர்த்து வைப்பதில் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.
அவர்களது இந்த நிலைப்பாடானது எமக்கு மிகுந்த வருத்தத்தையும் ஏமாற்றத்தையுமே தந்திருக்கின்றது. எங்களிடம் வாக்குப் பெற்று தேர்தல்களில் வெற்றி பெற்றவர்கள் இன்றும் கூட தமது சுயலாப அரசியலையே முன்கொண்டு செல்லும் அதேவேளை தமது சுகபோக வாழ்க்கையை இழந்து விடாமல் இருப்பதில் மிகவும் கண்ணும் கருத்துமாகவே இருக்கின்றனர்.
கடந்த காலங்களில் நாம் தெரிவு செய்தவர்கள் இற்றைவரையில் எம்மை ஏமாற்றி தமது சுயலாப அரசியலை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் எமது மக்களை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு சிறந்த தலைமைத்துவமும் வழிகாட்டலும் கொண்ட ஒரு தலைமையே நாம் எதிர்ப்பார்த்திருக்கின்றோம்.
அதனடிப்படையில் தீர்க்கதரிசனம் உள்ள மக்களின்பால் அக்கறை கொண்டு மக்களின் அன்றாட பிரச்சினைகள் உள்ளிட்ட அரசியல் உரிமைகளை வென்றெடுக்கக்கூடிய சிறந்த அரசியல் தலைமையாக நாம் உங்களையே பார்க்கின்றோம்.
அந்த வகையில் இதுவரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்படாதுள்ள உட்கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி பணிகளைக் கருத்திற்கொண்டு எமக்கு சரியானதும் நிலையானதுமான வேலைத்திட்டங்களுக்காக உங்களது பணிகள் எமது மாவட்டத்திற்கு மேலும் அவசியமாகவுள்ளன.
அந்த வகையில்தான் தீர்க்கதரிசனம் மிக்க அரசியல் தலைமையாக எமது மாவட்டத்தில் வாழும் மக்களின் வாழ்வாதார மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு நீங்கள் உதவ வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் எனவும் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பிரதிநிகள் மேலும் தெரிவித்தனர்.
Related posts:
|
|