அரச தொழில்வாய்ப்புகளில் இன விகிதாசாரம் பேணப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Saturday, August 19th, 2017
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் தமிழ் மொழியினைத் தாய்மொழியாகக் கொண்டவர்களையும், இனப் பாகுபாடுகளுக்கு அப்பால் அவர்களது தகைமை, திறமை, தகுதிகளை அவதானத்தில் கொண்டு உயர் பதவிகளில் அமர்த்தி வருவது பாராட்டத்தக்கது. அந்த வகையில் ஜனாதிபதி அவர்களுக்கும், பிரதமர் அவர்களுக்கும் எமது மக்கள் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை, அரச தொழில்வாய்ப்புகளின்போது இன விகிதாசாரத்தைப் பேணும் வகையில் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதும் அவசியாமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் 21வது கடற்படைத் தளபதியாக நியமனம் பெற்றுள்ள றியர் அட்மிரால் ட்ரவிஸ் சின்னையா அவர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா அவர்கள், றியர் அட்மிரால் ராஜநாதன் ராஜன் கதிர்காமருக்குப் பின்னர் சுமார் அரை நூற்றாண்டு கடந்து இப் பதவி றியர் அட்மிரால் ட்ரவிஸ் சின்னையா அவர்களுக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், திறமை, தகைமை மற்றும் தகுதி அடிப்படையில் இத்தகைய பதவிகள் தமிழ் மொழி பேசுகின்ற அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுவருகின்ற ஒரு சிறந்த சூழ்நிலை தற்போது பேணப்பட்டு வருவது பாராட்டத்தக்கது. அத்துடன், அரச தொழில் வாய்ப்புகளின்போது இன விகிதாசாரம் பேணப்படுதலும் இன்று மிகவும் அவசியமாகத் தேவைப்படுகின்ற ஓர் ஏற்பாடாகவே காணப்படுகின்றது.
இன்றைய நிலையில், அரச தொழில் வாய்ப்புகளின்றி பெரும்பாலான தமிழ், முஸ்லிம் இளைஞர், யுவதிகள் போராட்ட நிலைமைகளுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலைகளைக் காரணம் காட்டி தமிழ் பேசும் மக்கள் அரச தொழில்வாய்ப்புகளில் புறக்கணிக்கப்பட்ட ஒரு நிலை தொடர்ந்திருந்தது. இனியும் இந்த நிலை தொடருமானால் எமது மக்கள் தடம் மாறிச் செல்கின்ற நிலைமைகள் தவிர்க்க முடியாததாகிவிடலாம்.
தற்போதைய நிலையில் அநேகமான அரச அலுவலகங்களை எடுத்துக் கொண்டால், தமிழ் மொழி மூல அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறைகள் ஏராளமாக இருப்பதைக் காண முடிகின்றது.
எனவே, இத்தகைய நிலைமைகள் மாற்றப்பட வேண்டும். இதற்கு ஓர் ஏற்பாடாக முன்னாள் ஜனாதிபதி ரணசிங்ஹ பிரேமதாச அவர்களது ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட இன விகிதாசார அடிப்படையிலான அரச தொழில் வாய்ப்புகள் முறைமையை மீள செயற்படுத்துவதற்கு இந்த அரசு முன்வர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளமை; குறிப்பிடத்தக்கது.

Related posts:


என்னை கொல்ல முயற்சித்தவர்களைக் கூட நான் தண்டிக்க நினைத்ததில்லை - சண் நியூஸ் தொலைக்காட்சியில் எம்.பி ...
யாழ்ப்பாணத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு விளையாட்டு மைதானம் அமையப் பெற வேண்டும் – டக்ளஸ் எம்.பி...
ஊடகங்கள் மீதான அராஜகங்கள் அனைத்துக்குமான பழி ஈ.பி.டி.பி. மீது சுமத்தப்பட்டது. - மூத்த ஊடகவியலாளர் ஒப...