வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு தொடர்ந்து நிவாரணமும் உரிய நஷ்டஈடும் வழங்கப்பட வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Tuesday, January 8th, 2019

வடக்கு மாகாணத்தில் கடந்த நாட்களில் பாரியதொரு வெள்ளப் பாதிப்புகளுக்கு எமது மக்கள் முகங்கொடுத்துள்ளனர். அந்த வகையில் வடக்கு மாகாணத்தில் ஐந்து மாவட்டங்களிலுமாக சுமார் 1 இலட்சத்து 30 ஆயிரம் பேருக்கும் அதிகமான மக்கள் பெரும் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். பாரியளவில் பயிர் நிலங்கள் அழிவடைந்துள்ளன. ஆயிரக் கணக்கில் கால்நடைகள் அழிந்துள்ளன. பல்வேறு உட்கட்டுமாண வசதிகள் அழிந்தும், சேதமடைந்தும் உள்ளன.

மேற்படி பாதிப்புகளின்போது அங்கு சென்று அம் மக்களைப் பார்வையிட்டு, உதவிகளைப் புரிந்த அனைத்து அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பாதுகாப்புத் தரப்பினர், பொலிஸார் அனைவருக்கும் எமது மக்கள் சார்பில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதேநேரம், பாதிப்படைந்துள்ள குளங்கள் உள்ளடங்கலான உட்கட்டுமான வசதிகளை மீள அமைப்பதற்கும், அழிவடைந்துள்ள பயிர் நிலங்களுக்கான நட்டஈடுகளை வழங்குவதற்கும், அழிவடைந்துள்ள கால்நடைகளுக்கான நட்டஈடுகளை வழங்குவதற்கும் இந்த அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்வர வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் 1996 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க இராஜதந்திர சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழான கட்டளைகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஏற்கனவே பல்வேறு தடைகள், அத்துமீறல்கள், நிராகரிப்புகள், போதிய தொழில்வாய்ப்புகள் இன்மை, வாழ்வாதாரங்களுக்கான வசதி வாய்ப்புகள் மறுதலிப்புகள் போன்ற பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டு வாழ்ந்திருந்த வடக்கு மாகாண மக்களுக்கு இந்த வெள்ளப் பாதிப்பு என்பது ‘மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதித்த’ கதையாகியே உள்ளது.

வடக்கு மக்களுக்கென தெரிவாகியுள்ள மக்கள் பிரதிநிதிகள் பலரும் அந்த மக்களை பிரதிநிதித்துவம் செய்யாது, அந்த மக்களை நடுத் தெருவில் கைவிட்டது மட்டுமின்றி, இன்று அரசியல், சமூக, பொருளாதார ரீதியில் அனாதைகளாக்கியும் விட்டுள்ளனர்.

வடக்கு – கிழக்கு மக்களின் வாக்குகளுக்காக அந்த மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி, அரசியல் பதவிகளை எட்டிப் பிடித்த தமிழ் அரசியல்வாதிகள் பலரும் இன்று அந்த மக்களின் முன்பாக அம்பலப்பட்டுப் போயுள்ளனர்.

பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டு, கடைசியில் கட்டியிருந்த கோவணமும் இழக்கப்பட்ட நிலைக்கு ஆளாகியிருக்கின்ற இந்த தமிழ் அரசியல்வாதிகளால், எமது மக்கள் சட்டியிலிருந்து அடுப்பில் விழுந்த நிலைக்கே இன்று ஆளாகியிருக்கின்றனர்.

எனவே, இன்று அவர்களது ஏமாற்று அரசியல் என்பது எமது மக்களிடையே தௌ;ளத் தெளிவாக அம்பலமாகி, எமது மக்கள் தங்களுக்கு உண்மையான அரசியல் பிரதிநிதிகளின் பக்கமாக அணிசேர ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில், எமது மக்களை பாதிப்புகளிலிருந்து மீட்டு, அவர்களுக்கான எதிர்காலத்தை ஒளிமயமானதாக உருவாக்கி, அதனை வளர்த்தெடுக்க வேண்டிய பாரிய வரலாற்றுக் கடமை எமக்குண்டு என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் nதிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

Related posts:


நவீன வசதிகளுடன் கூடைப்பந்தாட்ட மைதானம் அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் - டக்ளஸ் தேவானந்தா...
யுத்தத்தின் பின் வடக்கில் பொருளாதாரப் புரட்சி மேற்கொள்ளப்பட்டிருதல் வேண்டும் – டக்ளஸ் எம்.பி. சுட்டி...
பேலியகொட மீன் சந்தையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை - நேரடியாக நிலைமைகளை ஆராய்ந்தார் அமைச்சர் டக்ளஸ்...