புதிய அரசியலமைப்பு தொடர்பிலான இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்கத் திட்டம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/10/625.500.560.350.160.300.053.800.900.160.90-8.jpg)
புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான சட்டமூலத்திற்குரிய இடைக்கால அறிக்கையொன்றை அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக நாட்டிற்குப் பொருந்தக்கூடிய அரசியலமைப்பு ஒன்றைத் தயாரிப்பதே முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது.இந்த நோக்கத்தை அடிப்படையாக வைத்து பாராளுமன்றத்திலுள்ள 225 உறுப்பினர்களையும் உள்ளடக்கியதாக ஸ்தாபிக்கப்பட்ட அரசியலமைப்பு குழு, கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி கூடியது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான 21 பேரடங்கிய அரசியலமைப்பு நடவடிக்கை குழு மற்றும் ஆறு உப குழுக்கள் இதன்போது உருவாக்கப்பட்டிருந்தன.புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஆலோசனைகளை வழங்குவதற்காக சட்ட மா அதிபரும் அரசியலமைப்பு நடவடிக்கை குழுவிற்கு சமூகமளித்திருந்ததாக அந்த குழுவின் செயலாளரான பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல நியூஸ்பெஸ்ட்டுக்கு கூறினார்.
தேர்தல் முறை, அதிகாரப் பகிர்வு மற்றும் நிறைவேற்றதிகாரம் போன்ற விடயங்கள் தொடர்பில் இந்த நாட்களில் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.அரசியலமைப்பு குழு, பிரதமரி்ன் தலைமையில் கடந்த நான்கு நாட்களாகக் கூடி கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றது.
இதன் பிரகாரம், அரசியலமைப்பு நடவடிக்கை குழுவானது, வரவு – செலவுத்திட்ட விவாதம் இடம்பெற்று வருகின்ற காலப்பகுதியில், தமது இடைக்கால அறிக்கையை அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக நீல் இத்தவெல தெரிவித்தார்.இந்த இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், மக்களுக்காக பகிரங்கப்படுத்தப்படும் என அவர் மேலும் கூறினார்.
Related posts:
|
|