வடக்கு அரிசி ஆலை உரிமையாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு சமாசம்!

Wednesday, October 10th, 2018

வடக்கு மாகாணத்தில் அரிசி ஆலை உரிமையாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு என்று சமாசங்கள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதில் ஐந்து மாவட்டங்களுக்கும் தனித்தனியான சமாசங்கள் அமைக்கப்பட்டு அந்தச் சமாசங்கள் ஊடாக வடக்குக்கு என்று தனியான சம்மேளனம் ஒன்றையும் விரைவில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடக்கு மாகாணக் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் என்று தனித்தனியாக அரிசி ஆலை உரிமையாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்கள் அமைக்கப்பட்டு நிறைவுற்றுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் அரிசி ஆலை உரிமையாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் ஒன்றை அமைப்பதற்கும் பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வடக்கில் ஐந்து மாவட்டங்களிலும் அமைக்கப்படும் இந்த அரிசி ஆலை உரிமையாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களைக் கொண்டு வடக்குக்கு என்று சமாசங்களின் சம்மேளனம் ஒன்று அமைக்கவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

குறிப்பாக வடக்கில் உள்ள அரிசி ஆலைகள் உரிமையாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் அபிவிருத்தி மற்றும் அதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வசதியாக இந்தச் சமாசங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.

Related posts: