சிறுபோக நெல் கொள்வனவு விலையை 120 ரூபாவிலிருந்து அதிகரிக்க வேண்டும் – கிளி மாவட செயலர் கோரிக்கை!
Friday, May 15th, 2026
……
வடக்கின் நெல் அறுவடைக் காலத்தைக் கருத்திற்கொண்டு பொதுவான சுற்றறிக்கைகளில் உள்ள இடர்களைத் தீர்க்கவும், சிறுபோக நெல் கொள்வனவு விலையை 120 ரூபாவிலிருந்து அதிகரிக்கவும், விவசாயிகளின் மேலதிகப் பயிர்ச் செய்கையைக் கண்காணிக்கக் கமநல சேவைகள் திணைக்களத்தின் இணையத் தரவுத் தளத்தை அணுக மாவட்டச் செயலகங்களுக்கு அனுமதி வழங்குமாறு கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
கமநல சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தம்மிக ரணதுங்க (15) இன்று யாழ் வருகை தந்திருந்த நிலையில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வடக்கின் விவசாயம் சார் பிரச்சினைகள் ஆராயப்பட்டன.
இதன்போதே கிளிநொச்சி மாவட்ட செயலர் இவ்வாறு கோரியிருந்தார்.
குறித்த கலந்துரையாடலின்போதுவிவசாயச் சங்கங்களின் கணக்குகளைப் பேணுவதில் வவுனியா மாவட்டத்தின் சிறப்பான நடைமுறையை மாகாணம் முழுவதும் பொதுவான ஒழுங்குமுறையாக நடைமுறைப்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது.
அத்துடன் மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விசேட விவசாயச் செயற்றிட்டங்கள் தொடர்பிலும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது.
வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படும் ‘சிறியளவிலான விவசாய முயற்சியாண்மை மற்றும் நிலைபேறான செயற்றிட்டம்’ ஊடாக விவசாயிகளின் நிலைபேறான தன்மையையும், சந்தை வாய்ப்புகளையும் அதிகரிக்கும் நோக்கில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், அதன் முன்னேற்றம் எதிர்பார்த்த மட்டத்தில் இல்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டது.
இத்திட்டத்தைத் துரிதப்படுத்த மாகாண மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கும் என உறுதியளிக்கப்பட்டது.
மேலும், நிறைவுக் கட்டத்திலுள்ள ‘காலநிலை சீர்மிகு நீர்ப்பாசன விவசாயத் திட்டம்’ குறித்து மீளாய்வு செய்யப்பட்டதுடன், ‘ரூபன்’ திட்டத்தின் முன்னேற்றங்களைக் கண்காணிக்க மாகாண மட்டத்திலான வழிநடத்தல் குழுவொன்றை அமைக்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
0000
Related posts:
|
|
|


