தற்கொலை குண்டு தாக்குதல்கள்: விசாரணைகுள் அகப்படும் பாதுகாப்பு அதிகாரிகள்?

Friday, May 24th, 2019


நாட்டின் பல இடங்களில் நடைபெற்ற தற்கொலை குண்டு தாக்குதலை தடுக்க தவறிய உயர் மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு, சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி, முன்னாள் பாதுகாப்புச் செயலர், பொலிஸ்மா அதிபர், அரச புலனாய்வுச் சேவையின் தலைவர், சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி மேல் மாகாணத்துக்கான மூத்த பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுக்கு எதிராகவே விசாரணை நடத்தப்படவுள்ளது,

குண்டுத்தாக்குதல்கள் தொடர்பாக ஆராய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் இரண்டு இடைக்கால அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே சட்டமா அதிபர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

மேலும், பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு எதிராக, விரிவான குற்றவியல் விசாரணையை முன்னெடுக்குமாறு, பதில் பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபரினால் இரண்டு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

அத்துடன், மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ்மா அதிபர் மற்றும் சிறப்பு அதிரடிப்படை கட்டளை அதிகாரி, மற்றும் அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் ஆகியோர், தமது கடமைகளை சரிவர நிறைவேற்றத் தவறியுள்ளனர்.

இதனால், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை நடத்துமாறு பொலிஸ் ஆணைக்குழுவுக்கு பரிந்துரைக்குமாறும், பதில் பொலிஸ்மா அதிபருக்கு, சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

Related posts: