ஜனாதிபதி இராஜினாமா செய்தால் நாடு மேலும் சின்னா பின்னமாகும் – இடைக்கால அரசாங்கமே நெருக்கடிக்கான ஒரே தீர்வு – முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Wednesday, April 13th, 2022

ஜனாதிபதி பதவி விலகுவது தற்போதைய பிரச்சினைக்கு இறுதித் தீர்வாக அமையாது. நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

இடைக்கால அரசாங்கத்தினூடாக தற்காலிக தீர்வு காண சகல அரசியல் கட்சிகளும் ஒன்றினைய வேண்டுமென பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் – நாட்டு மக்கள் இலங்கையரென்ற அடையாளத்துடன் ஒன்றிணைந்து சிறந்த தீர்வுக்காக போராடும்போது 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாத நிலை தற்போது காணப்படுகிறது.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் மீட்க வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் இடைக்கால அரசாங்கத்தில் ஒன்றிணைய வேண்டும்.

நாட்டில் நிதி நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில் பொதுத்தேர்தல் ஒன்றை நடத்தும் சாத்தியம் கிடையாது. சமூக கட்டமைப்பில் தற்போது தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு குறுகிய காலத்தில் தீர்வு பெற்றுக் கொள்ளாவிடின் அரசியல் செய்வதற்கும் நாடு இருக்காது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுவது தற்போதைய பிரச்சினைக்கு தீர்வாக அமையாது. புதிய பிரதமரின் தலைமைத்துவத்தின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபித்து அதனூடாக குறுகிய கால தீர்வுகாண எதிர்பார்க்கிறோம்.

பொருளாதாரம் மற்றும் அரசியல் கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடிக்கு யார் பொறுப்புக்கூற வேண்டும்? என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். பொறுப்புதாரி எங்குள்ளார் என்பது கூட அறிய முடியவில்லை.

தற்போதைய சூழ்நிலையில் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை காட்டிலும் பிரச்சினைக்கு தீர்வு காண்பது புத்திசாலித்தனமாக அமையும் என்றார்.

இதனிடையே நாடு தற்போதுள்ள சூழ்நிலையில் ஜனாதிபதி தமது பதவியை இராஜினாமா செய்வாரானால் நாடு மேலும் சின்னா பின்னமாகுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு ஒரே தீர்வு இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைத்து புதிய பிரதமர் மற்றும் சர்வகட்சி அமைச்சரவை ஒன்றை உருவாக்குவதே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இத்தகைய சந்தர்ப்பத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்து அது தோல்வியுற்றால் தற்போதைய அரசாங்கம் மேலும் பலமடையுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவை ஒன்றை நியமித்து தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் பின்னர் தேர்தல் நடத்தி புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான வாய்ப்பை மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: