குற்றவாளிகளை பாதுகாக்கும் அரசியல்வாதிகளே நாட்டுக்கு அச்சுறுத்தல் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி தெரிவிப்பு!

Thursday, February 7th, 2019

000

குற்றவாளிகளை ஒப்படைத்தல் தொடர்பில் நாடுகளுக்கிடையில் ஒப்பந்தங்கள் எட்டப்படுவது என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதொரு விடயம். என்றாலும், நான் ஏற்கனவே இங்கு சுட்டிக்காட்டியதைப் போன்று இந்த நாட்டுக்கு – நாட்டின் மக்களுக்கு பெரும் பாதிப்புகளை கொடுத்துள்ள மற்றும் கொடுத்து வருகின்ற நபர்கள் தங்கியிருக்கின்ற நாடுகளுடன் இத்தகைய உடன்பாடுகள் விரைவில் எட்டப்படுமானால், அது இந்த நாட்டின், நாட்டு மக்களின் எதிர்காலத்திற்கு சிறந்த வாய்ப்பாக அமையும் என்பதையே மீளவும் வலியுறுத்த விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற குற்றவாளிகளை ஒப்படைத்தல் கட்டளைச் சட்டம் மற்றும் கடன் இணக்க கட்டளைச் சட்டத்தின் கீழான கட்டளைகள் தொடர்பிலான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

குறிப்பாக, சிங்கப்பூர், டுபாய் போன்ற நாடுகளுடன் இந்த உடன்பாடுகளை எட்ட முடிந்தால் நல்லது. குறிப்பாக அர்ஜூன் மகேந்திரன் போன்றவர்களால் இந்த நாட்டின் பொருளாதாரமே பாரிய பின்னடைவுக்குத் தள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில், போதைப் பொருள் கடத்தல்காரரும், பாதாள உலகக் குழுத் தலைவர்களில் ஒருவரும் எனக் குறிப்பிடப்படுகின்ற மாகந்துர மகேஸ் உள்ளிட்ட 25 பேர் டுபாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது. இராஜதந்திர முன்னெடுப்புகளை மேற்கொண்டு, இவர்களை இலங்கைக்கு கொண்டு வர இந்த அரசு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இதேபோன்று அர்ஜூன் மகேந்திரன் தொடர்பிலும் ஒரு பொறிமுறையினை மேற்கொள்வது தொடர்பிலும் அரசு ஆராய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

அதேநேரம், இந்த குற்றவாளிகளை ஒப்படைத்தல் சட்டமானது அதனது, நோக்கங்களுக்கு புறம்பாக செயற்படாதிருப்பது தொடர்பிலும் அவதானங்களைச் செலுத்த வேண்டியுள்ளது. இச்சட்டமானது, கடந்தகால உரிமைப் போராட்டங்களில் தொடர்புபட்ட புலம்பெயர் மக்களை தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காக பழிவாங்கும் வகையில் அம் மக்களைப் பாதிக்காத வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

அதேபோன்று, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் பொது மன்னிப்பு என்கின்ற அடிப்படையில், ஓர் ஏற்பாட்டினை நீதி அமைச்சு முன்னெடுக்க வேண்டும் என்பதையும் நான் இந்தச் சந்தர்ப்பத்திலே மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன். 

எமது பகுதிகளை மட்டுமல்லாது, இன்று நாட்டின் கிராமப் பகுதிகளை அதிகமாக ஆட்டுவித்து வருகின்ற நுண் கடன் நிறுவனங்கள் தொடர்பில் ஒரு பொறிமுறை அவசியமாகின்றது. நிதி அமைச்சு இது தொடர்பில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கும் என எமது மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அது நடக்கவில்லை. நீதி அமைச்சாவது இந்த விடயத்தில் தலையிட்டு ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்iகியனை நான் இந்தச் சந்தர்ப்பத்திலே மீண்டும் முன்வைக்க விரும்புகின்றேன்

நிதி அமைச்சர் ஏற்கனவே ஒரு இலட்சம் ரூபாவுக்கு உட்பட்ட கடன் தொகையினைப் பெற்ற பெண்களுக்கு என ஒரு திட்டத்தை அறிமுகம் செய்திருந்தும், அத் திட்டத்தின் நிபந்தனைகள் காரணமாக அத் திட்டம் நுண் கடன் பெற்றிருக்கின்ற எமது குடும்பத் தலைமைத்துவப் பெண்களுக்கு பயனில்லாமல் போய்விட்டது.

அதுமட்டுமின்றி, அத் திட்டம் காரணமாக நுண் கடன் நிறுவனங்களால் எமது பெண்கள் மேலும் இழிவுபடுத்தப்படுகின்ற நிலைக்கே ஆளாக வேண்டியும் ஏற்பட்டது.

மிக அதிகரித்த வட்டி வீதங்களில், எவ்விதமான உத்தியோகப்பூர்வ ரசீதுகளும் இன்றி, வழங்கப்படுகின்ற இத்தகைய கடன்கள் சொற்பத் தொகையாக இருப்பினும் அதனை எமது மக்களின் வாழ்நாளில் முழுமையாக அடைக்க முடியாத வகையிலேயே செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன் மேற்படி கடன்களை வசூலிப்பதற்காக ஈடுபடுத்தப்படுகின்ற நபர்களால் எமது மக்கள் – குறிப்பாக பெண்கள் – அதுவும் குடும்பத் தலைமைத்துவப் பெண்கள் எதிர்நோக்குகின்ற இன்னல்கள் சொற்களில் அடங்காதவையாகும்.

இன்றும்கூட நாளாந்த பத்தரிகைகளில் விளம்பரப் பகுதிகளை எடுத்துக் கொண்டால், நிதி நிறுவனங்களுக்கு கடன்கனை வசூலிப்பதற்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரங்களை அதிகமாகக் காண முடிகின்றது.

நூற்றுக்கு 25 வீதத்திலிருந்தே இத்தகைய நிதி நிறுவனங்கள் வட்டிகளை அறவிடுகின்றன. சில நிதி நிறுவனங்கள் காலப்போக்கில் நூற்றுக்கு நூறு வீதத்தையும் தாண்டிய வட்டி அறவீடுகளைப் பெறுவதையும் காணக் கூடியதாக இருக்கின்றது.

இந்தவகையில் இந்த நிதி நிறுவனங்கள் கடன்களை வசூலிக்கச் செல்கின்ற பாணிகளினால் ஏற்படுகின்ற குழப்பங்கள் – பாதிப்புகள் – சமூகக் குற்றங்களை நோக்கியதான வழிகளை உருவாக்கி வருகின்றமையினாலும், நீதி, நியாயமற்ற வகையில் மக்கள் சுரண்டப்பட்டு வருவதனாலும், எமது மக்கள் தற்கொலைகளை நாடிச் செல்வதாலும், ஒரு பொறிமுறையினை உருவாக்குவதற்கு நீதி அமைச்சு முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

குறிப்பாக, கடன்களை வசூலிக்க வருகின்ற நபர்கள் தனியாக வீடுகளுக்குள் நுழையாத வகையில், கிராம சேவையாளருடனோ அல்லது அப்பகுதிக்கு பழக்கப்பட்ட சமூக ஆர்வலருடனோ வருவதற்கான ஏற்பாட்டினை வகுக்க வேண்டும்

கடன்கள் வழங்குகின்றபோது அதற்கான உரிய – உத்தியோகப்பூர்வமான பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

எல்லையற்ற வகையிலான வட்டி வீதங்களை குறைத்து, தண்டமாக அறவிடுகின்ற வட்டிகளை அகற்றிவிடல் வேண்டும்.

அதேபோன்று கடனை மீளச் செலுத்தி முடிப்பதற்கு குறைந்தபட்சமாக இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

மேற்படி நிதி நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் சமூகத்தின் நிலைப்பாடுகள் தொடர்பில் ஆராயவென ஆணைக்குழுவொன்றினை அமைக்க வேண்டும்.

அதேநேரம், இதற்கு சமாந்திரமான காலத்திலேயே எமது மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துகின்ற விசேட திட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசு உடனடியாக முன்வர வேண்டும்.

இத்தகைய விடயங்களை உள்ளடக்கி, ஒரு பொறிமுறை உருவாக்கப்படுமானால், நுண் நிதி மற்றும் ஏனைய நிதி நிறுவனங்களால் பாதிக்கப்பட்டு வருகின்ற மக்களுக்கு உரிய நிவாரணத்தினை வழங்க முடியுமெனக் கருதுகின்றேன்.

தென்னிலங்கையில் சக்விதி முதற்கொண்டு இன்றைய ஈ. ரி, ஐ. (ETI) வரையிலான நிதி நிறுவனங்கள் எவ்வாறு மக்களை ஏமாற்றி, மக்களது பணத்தினை கொள்ளையிட்டிருக்கின்றனவோ, அதே போன்று யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் எமது மக்களின் பணத்தை பெருவாரியாக கொள்ளையிட்ட சப்றா நிறுவனம் குறித்தும் சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்வர வேண்டும்

இவ்வாறு மக்களிடமிருந்து கொள்ளையிட்ட பணம் இன்று ஊடகங்களாக மாற்றம் பெற்று விற்பனை பண்டங்களாக மாறியிருக்கின்ற நிலையில், சப்றா நிறுவனத்தில் தங்களது பணத்தை வைப்பிலிட்டு ஏமாந்து நிற்கும் எமது மக்களுக்கு அந்தப் பணத்தை வட்டியுடன் திருப்பிப் பெற்றுக் கொடுக்க முடியும் என்தையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அப்போதைய காலகட்த்தில் அவர்களுக்கு சார்பான அரசியல் சூழல் காரணமாக இந்த சப்றா நிதி நிறுவன மூலகர்த்தாக்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிட்டார்கள். தற்போதைய நிதி நிறுவனங்கள் பலவும் எமது மக்களை மிக அதிகளவில் ஏமாற்றி, கொள்ளையிட்டு வருவதற்கும் இந்த சப்றா நிதி நிறுவனமே மூல காரணம் என்பதையும் இங்கு மீண்டும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். 

எமது மக்களின் அவலங்கள் இத்தகைய அனைத்து வடிவங்களிலும் குடிகொண்டிருக்கின்றன. இயற்கை பாதிப்புகளாக இருக்கட்டும்,. செயற்கை அனர்த்தங்களாக இருக்கட்டும். போதைப் பொருளாக இருக்கட்டும். அரசின் பாராமுகமாக இருக்கட்டும். இவை அனைத்துக்கும் முதன்மை காரணகர்த்தாக்களாக எமது மக்களின் வாக்குகளை சுரண்டிய தமிழ் அரசியல்வாதிகளே இருக்கின்றார்கள்.

தெற்கிலே ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு போராடுகிறோம் எனக் கூறித் திரிவோர், வடக்கிலே எமது மக்களைப் பாதுகாப்பதற்கு வக்கற்றவர்களாக இருக்கின்றனர். எமது மக்கள் நாளாந்த வாழ்க்கையில் பல்வேறு சுமைகளுடன், எதிர்காலத்தை கேள்விக்குறியோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், அடுத்தகட்ட நகர்விற்கு எமது மக்கள் யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களிடம் போய் அரசியல் யாப்பு பற்றி பேசி, தங்களது கையாலாகாத் தனத்தினை வியாக்கியானப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அண்மையில்கூட,  எமது மக்களிடையே கருத்தறியப் போய், எமது சமூக பிரமுகர்களினால் நன்றாக வாங்கிங் கட்டிக் கொண்டும், அதிலிருந்தேனும் ஏதாவது பாடம் படித்து, எமது மக்களுக்கு ஒரு நல்லதையாவது செய்ய வேண்டும் என்ற நினைப்பே இல்லாத இவர்களால்தான் எமது மக்கள் இன்று இத்தகைய பாதிப்புகளை அடைந்து வருகின்றனர்.

ஜனநாயகத்தை காப்பாற்றப் போனதாகக் கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேரள கஞ்சாகாரர்களைத் தவிர்த்து, ஒரு ஜனத்தையாவது தங்களது வாழ்க்கையில் காப்பாற்றியிருக்கின்றார்களா? எனக் கேட்க விரும்புகின்றேன்

எமது மக்களின் நலன்களுக்கு பாதுகாப்பாக இல்லாமல், எமது மக்களின் அழிவுகளுக்கு பொறுப்பாக இருக்கிறார்கள்.

எமது மக்களின் தாகம் தீர்க்க கொஞ்சம் குடிநீரைப் பெறலாம் என நினைத்தால், அதற்கும் இவர்களே தடையாக பின்னால் நிற்கிறார்கள்.

எமது மக்களின் வாழ்வாதாரங்கள் அழிந்து, எமது மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்ட அண்மைய வெள்ளம் பற்றி ஆராய்கின்றபோது, அந்த அழிவின் பின்னணியிலும் இவர்களே நிற்கிறார்கள்.

வாழ்வெட்டு, போதைப் பொருள், சமூகச் சீர்கேடுகள் பற்றிப் பார்க்கின்றபோதும், அவற்றின் பின்னணியிலும் இவர்களே இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

எமது மக்களின் அவலங்களை திசை திருப்பி அதில் குளிர்காய்ந்து, அடுத்த தேர்தலில் எமது மக்களின் வாக்குகளை சூறையாடுவதற்காகவே இவர்கள் இப்போது புதிய அரசியல் யாப்பு நகல் என்றொன்றை வைத்துக் கொண்டு, இந்த நாட்டில் மீண்டுமொரு குழப்பத்தை உருவாக்கி வருகின்றனர்.

இவர்கள் கூறுகின்ற புதிய அரசியல் யாப்பு வரைபிலே எமது மக்களுக்கு என்னென்ன நன்மைகள் இருக்கின்றன என்பதை இவர்களால் கூற முடியுமா?.. எனக் கேட்க விரும்புகின்றேன். ஆளும் வர்க்கத்திற்கு சார்பானதாக மாத்திரமே ஏற்படுத்தப்படுகின்ற இத்தகைய யாப்புகளால் எமது மக்கள் எத்தகைய நன்மைகளை அடைவார்கள் என்பது பற்றி உறுதியிட முடியுமா? எனக் கேட்க விரும்புகின்றேன்.

ஜனநாயகத்தைக் காப்பாற்றப் போகின்றவர்களுக்கு இந்த நாட்டில் மாகாண சபைக்கான தேர்தலை நடத்துமாறு கோர இன்னமும் வக்கில்லாமல் இருக்கிறது. ஆளுந்ததரப்பில் இருக்கின்ற உங்களால், இவற்றை எல்லாம் செய்ய முடியாது என்றில்லை. விரும்பமும், ஆற்றலும், அக்கறையும் எமது மக்களின் மீதாக இருக்குமானால், நிச்சயமாக இவற்றினை செய்ய முடியும்.

எமது சமூகத்திலே ‘பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க” என வாழ்த்துவார்கள். ஆனால், எமது மக்கள் பதினாறையும் பெற்றும் அவல வாழ்க்கையினையே இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்தையும் இங்கு சுட்டிக்காட்டுகின்றேன்.

Related posts:

வன விலங்குகளைப் பாதுகாக்க செயற்றிறன்மிக்க நடவடிக்கை தேவை! -டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
போக்குவரத்து விதிகள் தொடர்பில் ஒரு நிலையான நிலைப்பாடு எட்டப்படுவது அவசியமாகும் - டக்ளஸ் தேவானந்தா வல...
கூட்டமைப்பின் அக்கறையின்மையால் தமிழர்களின் கோரிக்கைகள் மதிப்பிழந்து போகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ்...