இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஷீமோன் பெரெஸ் காலமானார்!
Wednesday, September 28th, 2016
மூத்த இஸ்ரேலியத் தலைவரும் அரசியல்வாதியுமான ஷீமோன் பெரெஸ் காலமானார். அவருக்கு வயது 93. இரண்டு வாரங்களுக்கு முன், ஸ்ட்ரோக் (மூளையில் ரத்தக் குழாய்வெ டிப்பு) ஏற்பட்டு மருததுவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார் பெரஸ்.
இஸ்ரேல் என்று ஒரு நாடு 1948ல் உருவானபோதே அவர் பொது வாழ்வில் இருந்தார். இரு முறை பிரதமராகவும், 12 வெவ்வேறு அரசுகளில் பல பதவிகளிலும் அவர் பணியாற்றியிருக்கிறார்.
அவரது ஆரம்ப கால அரசியல் வாழ்க்கையில் அவர் கடும்போக்காளராகக் கருதப்பட்டார் ஆனால் 1990களில் பாலத்தீனர்களுடன் அரசியல் ஒப்ந்தம் ஒன்று எட்டப்படுவதற்கு அவர் முக்கிய பங்காற்றி, அதற்காக யாசர் அரபாத் மற்றும் யிஷ்தாக் ராபினுடன் இணைந்து அமைதிக்கான நோபல் பரிசை வென்றார்.
இஸ்ரேலிய அதிபராக ஏழாண்டு காலம் பணியாற்றிய பின்னர், இரண்டாண்டுகளுக்கு முன்னர் அவர் அரசியலிலி்ருந்து ஓய்வு பெற்றார்.
இஸ்ரேலின் அணுசக்தித் திட்டத்தின் தந்தை என்றறியப்படும் இவர், பிரான்சுடன் ரகசியமாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, அணுசக்தித் தொழில்நுட்பத்தைப் பெற்று, டிமோனாவில் அணு உலை கட்ட வழிவகுத்தார்.
போலந்தில் பிறந்த ஷீமோன் பெரெஸ் , அப்போது பிரிட்டிஷ் ஆளுகைக்குட்பட்ட பாலத்தீனத்துக்கு 1934ல் குடியேறினார்.
பெரெஸின் மகன் ஹெமி, தன் தந்தையின் 70 ஆண்டு கால பொதுவாழ்க்கை சேவையைப் பாராட்டி, இஸ்ரேலிய மக்களுக்கு , அவர்கள் அவர்களுக்கென்று ஒரு நாடு தோன்றுவதற்கு முன்பே பணியாற்றியவர் பெரெஸ் என்றார்.
இஸ்ரேலின் தற்போதைய தலைவரான பெஞ்சமின் நேடன்யாகூ , பெரஸின் மறைவு குறித்து தனது ஆழ்ந்த தனிப்பட்ட இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய அமைச்சரவை பின்னர் தனது அஞ்சலியை வெளிப்படுத்த சிறப்புக் கூட்டம் ஒன்றில் கூடவிருக்கிறது.
அமெரிக்க அதிபர் ஒபாமா விடுத்த இரங்கற்குறிப்பில், ஷீமோன் பெரெஸ் வரலாற்றின் போக்கை மாற்றியவர் என்றும், இஸ்ரேலின் சாரமாக விளங்கியவர் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.பில் கிளிண்டனும், ஹிலரி கிளிண்டனும் தாங்கள் ஒரு நண்பரை இழந்து விட்டோம் என்றும், மத்திய கிழக்கு பிராந்தியம் அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்காக வாதாடிய ஒருவரை இழந்துவிட்டது என்றும் கூறியிருக்கின்றனர்.
Related posts:
|
|