ரஷ்யா – உக்ரைன் யுத்தம் – நாற்பது ஆண்டுகளுக்கு பின்னர் அவசரமாக கூடுகிறது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்!

Monday, February 28th, 2022

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடுவது தொடர்பாக விவாதிக்க ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்பு அவசர கூட்டம் இன்று நள்ளிரவு கூடுகிறது.

40 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக ஐ.நா.சபையின் சிறப்பு அவசர கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற ஐ .நா. பொதுசபையின் கூட்டத்தில், அமெரிக்கா மற்றும் அல்போனியா நாடுகள் இணைந்து ரஷ்யாவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானத்தை கொண்டு வந்தன.

இதனை தொடர்ந்து, ரஷ்யாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது 15 நாடுகள் கொண்ட ஐ .நா. பொதுசபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது.

இந்த வாக்கெடுப்பில் 15 உறுப்பினர்கள் கொண்ட இந்த பாதுகாப்பு கவுன்சிலில், 11 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தன.

ஆனால் சீனா, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் வாக்களிக்கவில்லை. இந்நிலையில், ரஷ்யா – உக்ரைன் போர் குறித்து விவாதிக்க ஐ.நா. பொதுசபையின் 11வது சிறப்புக்கூட்டம் இன்று இரவு இலங்கை நேரப்படி 8.30 மணிக்கு ஐ.நா.சபையின் 11ஆவது அவசர சிறப்பு கூட்டம் கூடுகிறது.

இதில் 193 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு ஐ.நா. பொதுச்செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார். ஐ.நா. பொதுச்சபையின் தலைவர் அப்துல்லா ‌ஷகித் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் உக்ரைன்- ரஷ்யா போர் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

ஐ.நா. சபை சிறப்பு அவசர கூட்டம் கூட்டப்படுவதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் வரவேற்றுள்ளன. ரஷியாவுக்கு எதிராக 80 க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளதால் இன்றைய கூட்டத்தில் அந்நாட்டுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டத்தில் ரஷ்யாவுக்கு எதிராக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதால் அந்நாட்டுக்கு நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: