அதிகரித்து செல்லும் கொரோனா தொற்று: பிரான்சில் மே வரை ஊரடங்கு நீடிப்பு!

Tuesday, April 14th, 2020

கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் பிரான்ஸ் நாட்டில் மே மாதம் 11-ம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார்

அத்துடன் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான எல்லைகளும் மறுஅறிவித்தல் வரை தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், ‘’மே 11-ம் திகதி புதிய கட்டம் தொடங்கும் எனவும் அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருக்கும் எனவும் அப்போதைய நிலைமையின் அடிப்படையில் விதிமுறைகள் வகுக்கப்படும்’’ என அதிபர் இம்மானுவேல் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடான பிரான்சில் இதுவரை ஒரு இலட்சத்து 36 ஆயிரத்து 779 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 14 ஆயிரத்து 967 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தாக்கம் தீவிரமடைந்த நாள் முதல் அங்கு ஊரடங்கு அமலில் உள்ளது.

இதேவேளை, தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 1,925,179 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதுடன், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 119,699 பேர் பலியாகியுள்ளனர்

Related posts: