அண்ணனுக்கு தொடர்பில்லை- தங்கை மதுபாலா!

Wednesday, July 6th, 2016

சுவாதி கொலையில் தனது அண்ணன் ராம்குமாருக்கு எதுவித தொடர்பில்லை என்று அவரது தங்கை மதுபாலா தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

சென்னை என்ஜினீயர் சுவாதி கடந்த மாதம் 24-ந் திகதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள தேன்பொத்தை மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் (வயது 22) என்பவரை பொலிசார் கடந்த 1-ந் திகதி இரவு கைது செய்தனர்.

பொலிசார் கைது செய்ய முயன்றபோது ராம்குமார் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். பொலிசார் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேலும் அவரது பெற்றோர் மற்றும் சகோதரிகளையும் நெல்லைக்கு பொலிசார் அழைத்து வந்தனர்.

மேலும் ராம்குமாரின் பெற்றோரான பரமசிவன், புஷ்பம், தங்கை மதுபாலா ஆகியோரிடம் தனிப்படை பொலிசார் இரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ராம்குமாரை கடந்த 3-ந் திகதி நீதிமன்ற அனுமதியுடன் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்சில் சென்னைக்கு அழைத்து சென்றனர்.

அப்போது அவரது பெற்றோர், சகோதரியையும் பொலிசார் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து சென்றனர். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட ராம்குமார் குணமடைந்து தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை ராம்குமாரின் தாயார் புஷ்பம், தங்கை மதுபாலா ஆகியோர் மீனாட்சிபுரத்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு திரும்பினர். இந்த சம்பவம் குறித்து மதுபாலாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

ராம்குமாருக்கும், சுவாதி கொலைக்கும் சம்பந்தமே இல்லை. பொலிசார் எப்படியோ எனது அண்ணனை இதில் சிக்க வைத்து விட்டனர். அவர் குற்றவாளி இல்லை என்பதை கோர்ட்டில் நிரூபிப்போம். சந்தேகத்தின் பேரில் ராம்குமாரை பிடித்து விசாரித்த போதே இவர்தான் உண்மை குற்றவாளி என்று பொலிசார் புகைப்படத்தை வெளியிட்டு விட்டனர்.

பெண் என்றும் பாராமல் எங்கள் படத்தை வெளியிட்டு குடும்பத்தை அவமானப்படுத்தி விட்டனர். எங்கள் அண்ணன் வி.ஏ.ஓ. தேர்வில் பாஸ் செய்வதற்காக எப்போதும் புத்தகம் படித்து கொண்டு இருப்பான். இப்போது அவரது வாழ்க்கையை சீரழித்து விட்டனர்.

அவன் உண்மை குற்றவாளி இல்லை என்று விரைவில் தெரியவரும்.இவ்வாறு அவர் கூறினார். ராம்குமாரின் தந்தை பரமசிவன், மற்றொரு தங்கை காளீஸ்வரி ஆகியோர் சென்னையில் தங்கியிருந்து ராம்குமாரை ஜாமீனில் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகினர் என செய்திகள்

இதனிடையே நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் சுவாதி வழக்கின், அடுத்தடுத்த நகர்வுகள் விசாரணையின் போக்கையே கேள்விக்குட்படுத்தும் விதமாக ஆகிக்கொண்டிருக்கின்றன.

ராம்குமார் பேசிவிடக் கூடாது என்பதற்காக அவரது கழுத்தை அறுத்தது மட்டுமல்ல, ராம்குமாரின் வாக்குமூலமே சினிமா வசனத்தை மிஞ்சும் வகையில் உள்ளது’ என அதிர்ச்சி கிளப்புகின்றனர் வழக்கறிஞர்கள்.

சுவாதி படுகொலை வழக்கில் செங்கோட்டையைச் சேர்ந்த ராம்குமார், கடந்த வெள்ளிக்கிழமை அன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்வதற்காக பொலிஸ் வந்துவிட்ட சூழலை உணர்ந்து கொண்ட ராம்குமார், கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்த ராம்குமார், ‘ சுவாதி கொலைக்கும் எனக்கும் தொடர்பில்லை. காவல்துறையினருடன் வந்த நபர்களே கழுத்தை அறுத்ததாக’ தெரிவித்துள்ளதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இதுகுறித்து சுவாதி கொலை வழக்கில், ராம்குமார் சார்பாக ஜாமீன் மனு மீதான விசாரணையில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி ” சுவாதி கொலையைப் பொறுத்தவரையில், ஏராளமான சந்தேகங்கள் எழுகின்றன. ராம்குமார் கொடுத்ததாகச் சொல்லப்படும் வாக்குமூலம், பாரதிராஜாவின் சினிமா வசனத்தையே மிஞ்சுகிறது. பொலிஸார் யாரோ ஒருவரைக் காப்பாற்ற முயற்சி செய்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது என்றவர், வழக்கு தொடர்பாக எழும் சந்தேகங்களை பட்டியலிட்டார்.

  1. நெல்லை மருத்துவமனையில் இருந்த போது, மாஜிஸ்திரேட் முன்னிலையில் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். பொலிஸார் எழுதிய தாள்களில் ராம்குமார் கையெழுத்துப் போட்டிருக்கிறார். அந்தப் பேப்பரின் இறுதியில், ‘படித்துப் பார்த்தேன் சரி’ என்ற வார்த்தை இருக்கிறது. அந்த இடத்தில் ராம்குமார் கையெழுத்துப் போட்டிருக்கிறார். அந்த வாக்குமூலத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு வேலை தேடி சென்னை வந்ததாகவும், பிரபல ஜவுளிக்கடையில் வேலை பார்த்தாகவும் சொல்கிறார். அப்போது பேஸ்புக் மூலம் சுவாதியின் தொடர்பு கிடைத்ததாகவும் சொல்கிறார். மூன்று மாதத்திற்குள் காதல் உருவாகி, கொலை வரைக்கும் செல்லுமா?
  2. அதில், இரண்டு முறை ரயில்வே ஸ்டேஷன் வாசலில் வைத்தே அடித்ததாகவும், தன்னை அவமானப்படுத்தியதால் வாயை வெட்ட வேண்டும் என நண்பர்கள் சொன்னதாகவும், அதன்பேரில் அரிவாளை அவர்கள் கொடுத்ததாகவும் சொல்கிறார். யார் அந்த நண்பர்கள் என எந்த இடத்திலும் தெரிவிக்கப்படவில்லை. இது ஏன்?
  3. சுவாதி உயிரோடு இருக்கக் கூடாது என நினைத்த நபர்கள்தான், ராம்குமாரை ஒரு கருவியாகப் பயன்படுத்தியுள்ளனர். செங்கோட்டை பகுதியில் மிகுந்த சாதுவான பையனாகத்தான் ராம்குமார் இருந்திருக்கிறார். இவரை சிலர் பயன்படுத்தியிருக்க வாய்ப்பு உள்ளது. அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் காவல்துறை இறங்கியுள்ளதா?
  4. மூன்று மாதங்களுக்கு முன்பு, சுவாதியைக் கொலை செய்ய வேண்டும் என்பதற்காகவே ராம்குமார் சென்னை வந்திருக்க வாய்ப்பு அதிகம். இவருக்குப் பின்னால் இருக்கும் மர்ம நபர்கள் யார்?
  5. நள்ளிரவில் கைது செய்யச் சென்றபோது, பிளேடால் ராம்குமார் அறுத்துக் கொள்ளும் காட்சி என ஒரு படம் வெளியானது. கழுத்தில் அறுபட்டிருக்கும் பகுதியில் இன்னும் கொஞ்சம் ஆழமாக வெட்டுப்பட்டிருந்தால், ராம்குமாரால் பேசியிருக்கவே முடியாது. மிகத் துல்லியமாக கழுத்துப் பகுதியில் வெட்டியிருக்கிறார்கள். அவர் பேசவே கூடாது என பொலிஸார் முடிவு செய்தார்களா? அந்த நள்ளிரவில் இந்தக் காட்சியை கமராவில் படம் பிடித்தது யார்?
  6. ‘ராம்குமார்தான் குற்றவாளி, வேறு யாருமில்லை’ என கமிஷனர் ராஜேந்திரன் உடனே வெளியிட வேண்டிய கட்டாயம் என்ன? சுவாதியின் பெற்றோரை பேச விடாமல் தடுப்பது யார்?
  7. வீடியோ பதிவில், கொலையாளி எனச் சொல்லப்படும் நபரும் ராம்குமாரும் ஒருவர்தான்’ என தடய அறிவியல் துறை ஆய்வு செய்து அறிக்கை கொடுக்காத போது, இருவரும் ஒருவர்தான் என்ற முடிவுக்குக் காவல்துறை எப்படி வந்தது?
  8. தனியார் மென்பொருள் நிறுவனத்தில், முதன்முதலாக மைசூரில் வேலை பார்த்திருக்கிறார் சுவாதி. கொலைக்கான பின்னணி அங்கிருந்தே தொடங்குகிறதா? மூன்று மாதங்களாக ஒருவர் பின் தொடர்கிறார் என்பது தெரிந்தும் அவரது பெற்றோரின் கவனத்திற்கு இந்த விவகாரம் வரவில்லையா? காவல்துறையில் சுவாதி புகார் தெரிவிக்காதது ஏன்? பி.ஈ படிப்பை பாதியில் நிறுத்திய ராம்குமாரை, இந்தக் கொலைத் திட்டத்திற்காகத் தயார்படுத்தியிருக்கிறார்கள் என வலுவான சந்தேகம் எழுகிறது. சுவாதி உயிரோடு இருக்கக் கூடாது எனத் திட்டமிட்டவர்கள் யார்? –

என வழக்கின் குளறுபடிகளை வரிசைப்படுத்திய வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, இறுதியாக, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலை நேரம் இந்தப் படுகொலை அரங்கேறியிருக்கிறது.

இந்த வழக்கில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவை அனைத்திற்குமான விடை வெளியில் வர வேண்டும். இனியும் இதுபோன்ற கொலைகள் நடந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில், அரசுக்கு உதவி செய்யவே இந்த வழக்கில் ஆஜராகியுள்ளேன்.சுவாதி கொலைக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்றார் உறுதியாக.

Related posts: