இந்துக்களின் போர் யாழ். இந்துக்கல்லூரியில் ஆரம்பம்!
Friday, June 10th, 2022இந்துக்களின் போர்’ என வர்ணிக்கப்படும், கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணிகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி 11 ஆவது தடவையாக இன்று யாழ்.இந்துக்கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.
11 ஆவது தடவையாக இரு கல்லூரிகளும் மோதும் இந்தப் போட்டி இன்று வெள்ளிக்கிழமையும் நாளை சனிக்கிழமையும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
1982 ஆம் ஆண்டு முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்ட இந்துக்களின் மாபெரும் போர், முதன்முறையாக இந்துக் கல்லூரி – கொழும்பு மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.
இரண்டாவது போட்டி 1983 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. இறுதியாக, கடந்த 2019 இல் சரவணமுத்து சர்வதேச மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் கொழும்பு இந்துக் கல்லூரி வெற்றி பெற்றிருந்தது.
பின்னர் நாட்டின் அசாதாரண சூழ்நிலைகளால் கடந்த இரண்டு வருடங்களாக தடைப்பட்டிருந்த இந்தப் போட்டியானது மீண்டும் இந்த வருடம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது.
முன்பதாக நடந்து முடிந்த 10 போட்டிகளில் நான்கில் கொழும்பு இந்துக் கல்லூரியும் ஒரு போட்டியில் யாழ். இந்துக் கல்லூரியும் வென்றுள்ளன. ஏனைய ஐந்து போட்டிகளும் சமநிலையில் முடிவடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|