27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு – நாடளாவிய ரீதியில் விற்பனைக்கு வரும் நிவாரண பொதி!

Thursday, April 1st, 2021

பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள சகல சதொச விற்பனை நிலையங்கள் ஊடாகவும் 12 அத்தியாவசிய பொருட்களை உள்ளடக்கிய 1000 ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரண பொதி விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.

அத்துடன் 27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வர்த்தகத்துறை அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் –

அரிசியின் விலையில் தளம்பல் நிலை ஏற்படுவதற்கு பல காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.

புத்தாண்டு காலத்தில் நாட்டு மக்களுக்கு நிவாரண விலையில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட ஆலோசனை வழங்கியுள்ளார்.

சிறு மற்றும் மொத்த உற்பத்தியாளர்களிடமிருந்து அத்தியாவசிய உணவு பொருட்களை நேரடியாக கொள்வனவு செய்யும் புதிய வழிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

விலை மனுகோரல் ஊடாக பொருட்களை கொள்வனவு செய்யாமல், கையிருப்பின் அடிப்படையில் பொருட்களை கொள்வனவு செய்யும் வழிமுறை தற்போது செயற்படுத்தப்படுகிறது.

அதேவேளை பண்டிகை காலத்தில் பல்வேறு துறைகள் ஊடாக நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய சதொச விற்பனை நிலையம் ஊடாக அத்தியாவசிய உணவு பொதி நிவாரண அடிப்படையில் இன்றுமுதல் ஏப்ரல் மாதம் வரை விற்பனை செய்யப்படும்.

அதனடிப்படையில் வெள்ளை அரிசி, நாட்டரிசி, வெள்ளை சீனி, பருப்பு, கோதுமை மா என்பன தலா ஒரு கிலோகிராம், உப்பு, நெத்தலி 250 கிராம், துண்டு மிளகாய், தேயிலை தூள், சோயா மற்றும் முகக்கவசம் ஆகிய 12 அத்தியாவசிய பொருட்களின் பொதி 1000 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும்.

அத்தியாவசிய பொருட்களின் விலை கடந்த காலத்தை விட தற்போது பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் பல தேசிய மட்டத்தில் பயிரிடப்பட்டுள்ளன. எதிர்பார்க்கும் விளைச்சல் கிடைக்கப் பெற்றவுடன் தற்போது விலை அதிகரிக்கப்பட்டுள்ள மஞ்சள், உழுந்து, பயறு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின விலையும் குறைக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: