சபையின் வளங்களைக்கொண்டு மேற்கொள்ளப்படக்கூடிய அதிகமான தேவைப்பாடுகள் செயற்படுத்தப்பட்டுள்ளன – வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தெரிவிப்பு!
Friday, March 22nd, 2019சபையின் வளங்களைக் கொண்டு மேற்கொள்ளப்படக்கூடிய அதிகமான தேவைப்பாடுகள்; எமது பிரதேச மக்களின் நலன்கள் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனாலும் சபையின் ஆற்றுலுக்கு அப்பாற்பட்ட இதர திணைக்களங்களின் மூலம் மேற்கொள்ளப்படவேண்டிய தேவைப்பாடுகளை அத்துறைசார்ந்தவர்களிடம் நாம் கோரிக்கைகளாக சமர்ப்பித்துள்ளோம். அவையும் காலக்கிரமத்தில் நிறைவுசெய்யப்படும் என எதிர்பார்ப்பதாக வேலணை பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் சபையின் மாதாந்த அமர்வு நடைபெற்றபோது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
எமது சபையின் வரையறைக்குள் செய்யப்பட வேண்டிய பல விடயங்களை நாம் மக்களின் நலன்கள் கருதி மேற்கொண்டுள்ளோம். குறிப்பாக மின்விளக்குகள் பொருத்தல், பற்றைகள் துப்பரவாக்கி சுற்றுச்சூழலை சீராக்கல், பொலிஸ் காவலரண் அமைக்க ஏற்பாடு, சட்டவிரோத செயற்பாடுகளை தடைசெய்தல், குடிநீர் வழங்கலுக்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல செயற்பாடுகளை இவ்வருடத்தின் ஆரம்பகாலத்தில் மேற்கொண்டுள்ளோம்.
இன்னும் பல திட்டங்கள் எமது சபையின் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றையும் நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றோம் என்றார்.
இதன்போது சபையில்; ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரான தவரூபன் நயினாதீவு தங்குமிடம் புனரமைப்பு விரைவில் மேற்;கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டதுடன் இது இம்முறை நயினாதீவு ஆலய திருவிழாவுக்கு முன் மேற்கொள்ளப்பட்டால் சபைக்கு வருமானத்தை அதிகம் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்ததுடன் நயினாதீவு சந்தைகளை திறப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.
இதன்போது மற்றொரு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரான மகிந்தன் சரவணை பிரதேச சந்தை புனரமைக்கப்பட வேண்டும் என்றும்; தமது பகுதியில் சட்டவிரோத மாடுகள் இறைச்சியாக்கப்படுவதை தடைசெய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மற்றொரு உறுப்பினரான திருமதி அனுஷியா அல்லைப்பிட்டி பகுதியில் தனியாரால் பொருத்தப்பட்டு பிரதேச சபையின் பொறுப்பிற்கு கொடுக்கப்பட்ட தெரு மின் விளக்குகள் சில பழுதடைந்திருப்பதால் அவற்றை திருத்தி மீளவும் செயற்படுத்த சபை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
சட்டவிரோத கடலட்டை பண்ணையை தடைசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளும் போது கடற்றொழிலாளர் சங்கங்களினதும் கருத்துக்களை கேட்டறிந்து அவர்களையும் அதில் உள்ளடக்கி நடவடிக்கைகளை முன்னெடுத்தால் குறித்த விடயத்திற்கு தீர்வுகாண்பது இலகுவானதாக இருக்கும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரான ஹேமதாஸ் சுட்டிக்காட்டினார்.
மேலும் சபையின் உறுப்பினரான சின்னையா சிவராசா புளியங்கூடல் பிரதேசத்தின் ஒரு பகுதி எமது பகுதியின் ஆளுகைக்குள் அடங்குவதால் அப்பிரதேசத்தின் நலன்களிலும் சபை அதிக அக்கறை செலுத்த வேண்டும் என தெரிவித்தார்
குறித்த விடயங்கள் காலக்கிரமத்தில் செயற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சபையில் ஆலோசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|