வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்கு வசதியாக குற்றவியல் சட்டத்தில் முன்விசாரணை முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை – நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Thursday, February 10th, 2022

குற்றச் செயல்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்கு வசதியாக குற்றவியல் சட்டத்தில் முன்விசாரணை முறையை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் நீதித்துறையுடன் தொடர்புபட்ட குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது நீதி அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில் – சட்ட சுயாதீனத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் சட்டம் தொடர்பில் மக்களுக்குள்ள நம்பிக்கையை வலுப்படும் வகையிலும் நீதித்துறையில் சில திருத்தங்களை கொண்டுவர எதிர்பார்த்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

வழக்குகள் பல வருட கால தாமதமாவதால் அதனைத் தடுப்பதற்கு மாற்று வழிகள் அவசியமென்றும் தெரிவித்த அவர் மக்கள் சட்டத்தில் மூலம் நியாயமான தீர்ப்பை எதிர்பார்க்கின்றனர் இதன் காரணமாக வழக்குகளில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க வேண்டும்.

சிறுவர் பாலியல் முறைகேடு தொடர்பான வழக்கு ஒன்றை சுட்டிக்காட்டிய அமைச்சர் இந்த வழக்கு 20 வருட காலம் நடைபெற்றது. அதன் பின்னரே தீர்ப்பு வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர் இளம் வயதை எட்டியபோதே தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ்வாறான தாமதங்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

சில வழக்குகள் பரம்பரை பரம்பரையாக தொடர்கின்றன. சில வழக்குகள் 50 வருடங்களுக்கு மேல் தொடர்கின்றன இதற்கு மாற்று வழி அவசியம்.

இந்தத் திருத்தங்களை முன்வைப்பதற்கு முன்பாக நான் சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடினேன். சபையிலும் அனைவரும் இதற்கான ஒத்துழைப்பை வழங்குவார்களென்ற நம்பிக்கை உண்டு.

சில சட்டத்தரணிகள் வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்கு விருப்பமில்லாமல் உள்ளார்கள் என்ற தவறான கருத்துக்களும் சமூகத்தில் நிலவுகின்றன.

அவ்வாறு விரைவுபடுத்தினால் அவர்களுக்கான தொழில் இருக்காதென்றும் தெரிவிக்கப்படுகிறது. அது தவறானது என்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: