வடக்கில் 1843 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு – மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!

Tuesday, July 4th, 2023

வடக்கு மாகாணத்தில் 1843 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்

வடக்கு மாகாண சுகாதார சேவை திணைக்களத்தில் இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் கடந்த ஆறு மாதங்களில் 1843 பேர் டெங்கு நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ளார்கள். இதுவரையில் தென்பகுதியில் இருந்து வந்த ஒருவர் மாத்திரம் டெங்கு தாக்கத்தினால் இறப்புக்கு உள்ளாகி இருக்கின்றார்.

இது தவிர வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 1491 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 65 பேரும் மன்னார் மாவட்டத்தில் 77 பேரும் வவுனியா மாவட்டத்தில் 106 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 104 பேருமாக மொத்தமாக 1843 பேர் டெங்கு நோய் தாக்கத்துக்குள்ளாகியுள்ளார்கள்.

வடக்கு மாகாணத்தின் ஏனைய மாகாணங்களை ஒப்பிடுகையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது. யாழ்ப்பாண நகர்ப்பகுதி, நல்லூர், கரவெட்டி பகுதிகளில் டெங்குத் தாக்கம் அதிகளவில் காணப்படுகின்றது

இலங்கையின் ஏனைய மாவட்டங்களிலும் டெங்கு தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. குறிப்பாக கொழும்பு கம்பஹா மாவட்டங்களில் டெங்கு தாக்கம் அதிகளவில் காணப்படுகின்றது.  ஏனைய நகரங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

டெங்குத் தொற்றை குறைப்பதற்கு குறிப்பாக டெங்கு பரப்பும் நுளம்புகளை இல்லாது ஒழிக்க வேண்டும். அந்த நுளம்புகள் குறிப்பாக பல்வேறு இடங்களில் பெருகி டெங்கு நோயைப் பரப்புவதனால் டெங்கு நோய் தாக்கமானது யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகளவில் ஏற்படுகின்றது.

எனவே டெங்கு தொற்றினை தவிர்ப்பதற்கு பொதுமக்கள் தமது சுற்றாடலை சுத்தமாக வைத்திருந்து பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: