வடக்கில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

Monday, March 15th, 2021

வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 422 பேரின் மாதிரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 13 பேரும் வவுனியா மாவட்டத்தில் ஒருவரும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்புடையவர் என்பதுடன் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

அத்துடன், யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஐவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் சுயதனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்பட்டு வந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைவிட, யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஏழு கைதிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஆடைத்தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கும் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்

Related posts: