யாழ் மாவட்டத்திலும் அச்சுறுத்தல் – மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் – வைத்தியர் யமுனானந்தா எச்சரிக்கை!

Tuesday, December 21st, 2021

உண்ணி காய்ச்சல், டெங்கு, மலேரியா நோய் தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் அவதானமாக செயற்படுங்கள் என யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் யமுனானந்தா எச்சரித்துள்ளார்.

இன்று யாழ். போதனா வைத்தியசாலை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

உண்ணி காய்ச்சல் என்பது மழைக்குப் பின்னரான காலத்தில் வயல்களில், தோட்டங்களில் வேலை செய்யும்போது தொற்றுகின்ற நோயாக காணப்படுகின்றது. இதனை ஆரம்பத்திலேயே சிகிச்சை அளித்தால் பாதுகாக்கலாம். தவறும் பட்சத்தில் உயிரிழப்பு ஏற்படலாம்.

எனவே, நாய், பூனைகளுடன் தொடர்பில் இருப்பவர்கள் கவனமாக இருத்தல் வேண்டும். காய்ச்சல் வரும்போது உரிய மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுது;தியுள்ளார்.

இதேவேளை டெங்கு காய்ச்சலும் இந்த மழையுடன் அதிகரித்து காணப்படுகின்றது. இதனை கட்டுப்படுத்த வேண்டும். யாழ். போதனா வைத்தியசாலையில் சுமார் 10 நோயாளர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றார்கள்.

சில நாட்களுக்கு முன் வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவருக்கு மலேரியா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  எனவே, யாழ்.போதனா வைத்தியசாலையினை சூழ உள்ள ஒரு கிலோ மீற்றர் சுற்று வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் இந்த நுளம்பு பரவலை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.

குறிப்பாக கட்டடங்கள், புதிதாக நிர்மாணிக்கப்படும் வீடுகள் என்பவற்றில் நீர் தேங்கி, இந்த நுளம்பு பெருகும். மலேரியாவை எமது நாட்டில் மீண்டும் பரவ செய்யாது, சுற்று சூழலை பாதுகாக்கும் வேலைகளை ஒவ்வொருவரும் பொறுப்புடன் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் மலேரியா கட்டுப்படுத்தப்பட்டதால், உலக சுகாதார நிறுவனத்தின் பாராட்டைப் பெற்றது. இதேவேளை, 1963ஆம் ஆண்டளவில் மலேரியாவை கட்டுப்படுத்த முடியாததால் மீள பரவியது.

மலேரியா பரப்புகின்ற நுளம்பு எமது பிரதேசத்தில் காணப்படுகின்றமையினாலும், தற்போது நோயாளி இனங்காணப்பட்டுள்ளமையாலும், அந்த நுளம்பினை கட்டுப்படுத்தவற்குரிய கவனம் எடுத்தல் வேண்டும்.

இதேவேளை மலேரியா நோய் தற்போது கட்டுப்பாட்டில் உள்ளதனால், இலங்கையில் பரவுவதற்கு சாத்தியக்கூறுகள் குறைவு. ஆனால், வெளிநாடுகளில் இருந்து அதாவது மலேரியா தோற்று உள்ள நாடுகளில் இருந்து வருவோர் கட்டாயமாக தமக்குரிய மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: