மாலைத்தீவிலிருந்து அனுப்பப்பட்ட கைதிகளில் காணாமற்போன 3 தமிழ் இளைஞர்கள் !

Wednesday, April 20th, 2016
இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் நல்லெண்ணத்தை மேம்படுத்தும் வகையில் மாலைத்தீவிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள 12 கைதிகளில் யுத்தம் இடம்பெற்றபோது காணாமற்போனதாக முறையிடப்பட்ட மூன்று தமிழ் இளைஞர்களும் அடங்குகின்றமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

விசுவமடு, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் இறுதிக்கட்ட யுத்தத்தில் காணாமற்போனதாக அவர்களது பெற்றோர்களினால் மன்னார் பிரஜைகள் குழுவின் ஊடாக காணாற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணைகளின்போது குறித்த மூவரும் 2008 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பலில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மாலைத்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 10 ஆம் திகதி மாலைத்தீவிலிருந்து இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட 12 கைதிகளின் பெயர் விபரத்தில் இவர்களது பெயர் விபரங்கள் உள்ளடங்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

.

Related posts: