பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பொன்றுக்குள் நாம் தொடர்ச்சியாகச் செயற்படாவிட்டால் நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் – 2023 இலங்கை பொருளாதார மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Wednesday, November 29th, 2023

நாட்டின் பொருளாதார ஸ்தீர நிலையை ஏற்படுத்த கடுமையான பொருளாதார மறுசீரமைப்பு அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

புதிய பொருளாதாரக் கொள்கைக்  கட்டமைப்பிற்குள் சகலரதும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதன் ஊடாக  வீழ்ச்சியடையாத வலுவான பொருளாதாரத்தை உருவாக்க முடியும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று (28) ஆரம்பமான 2023 இலங்கை பொருளாதார  மாநாட்டின் ஆரம்ப உரையை ஆற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்..

அத்துடன் இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற்றது. கடந்த ஒரு வருடத்தில் அரசாங்கம் மேற்கொண்ட  கடுமையான  பொருளாதார மறுசீரமைப்பு மூலம் இந்த நாட்டின் பொருளாதாரத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  கூறியதாவது:

இந்த நாட்டின் பொருளாதார  மீட்சிக்காக கடந்த வருடத்தில் நாம் முன்னெடுத்த வேலைத்திட்டத்தை பொருளாதார மறுசீரமைப்பு  என்று கூற முடியுமா என தெரியவில்லை. மறுசீரமைப்பு  என்ற வார்த்தையின் அர்த்தத்தை பார்த்தால் சில வாரங்களுக்கு முன்னர் பொருளாதாரத்திற்கு  நாம் மேற்கொண்டது மறுசீரமைப்பு அல்ல. இது ஒரு முழுமையான மீளமைப்பு  அல்லது   ஒரு தீவிர மறுசீரமைப்பு என்று சொன்னால் தவறில்லை. எம்மால் திரும்பிச் செல்ல முடியாது.   இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்போது நாம் வேலை செய்ய வேண்டும். இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பிற்குள் நாம் செயல்பட வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான இந்த ஆழமான பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகளில் நாம் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய முடிந்தது.

கடந்த சில மாதங்களில், எமது நாட்டிலுள்ள அனைத்து கடன் வழங்குநர்களுடனும்  முழுமையான நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டோம். இலங்கையின் வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லெண்ணம் காரணமாகவே இந்தச் செயற்பாட்டில் வெற்றிபெற முடிந்தது.

இலங்கையில் கடன் மறுசீரமைப்புக்கு கொள்கையளவில் உடன்பாடு வழங்கிய முதலாவது வங்கி சீனா எக்ஸிம் வங்கியாகும். உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழு மிக விரைவில் கொள்கையளவில் இதேபோன்ற உடன்பாட்டை  வழங்கும் என்று நம்புகிறோம்.

மேலும், எதிர்வரும்  டிசம்பரில் இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் முதல் மீளாய்வை சர்வதேச நாணய நிதியம்  நிறைவு செய்யும்   என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு நாடாக நாம் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தவிருக்கும் பொருளாதாரக் கொள்கைகள் இந்தப் பேச்சுவார்த்தைகளில் உள்ளடங்கும். அதிலிருந்து நாம் பின்வாங்கினால், கடன் வழங்குநர்கள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முற்படுவார்கள். அதன்படி, இந்த ஒப்பந்த கட்டமைப்பிற்குள் நாம் செயல்பட வேண்டும்.

ஏனெனில் இந்த நீண்ட கால உடன்படிக்கையை இழந்தால் அடுத்து யார் ஆட்சிக்கு  வந்தாலும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை தடுக்க முடியாது. எனவே, இந்த பொருளாதார கட்டமைப்பிற்குள் நாம் செயல்பட வேண்டும். இது ஒரு கடுமையான பொருளாதார மறுசீரமைப்பு என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் போட்டி நிறைந்த பொருளாதாரத்திற்கு நாம் செல்ல வேண்டும்.

பொருளாதார நெருக்கடியின் போது மேடைகளில் இருந்து தீர்வுகளைப் பற்றி பேசிய அரசியல் தலைவர்கள் இந்த திட்டத்தை அங்கீகரிக்கவில்லை. ஆனால் அவர்கள் இதுவரை எந்த தீர்வையும் முன்வைக்கவில்லை. ஒரு நாடாக, நாம் என்றென்றும் வங்குரோத்து நிலையில் இருக்க முடியாது. எனவே, நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்க்கும் வகையில் தற்போது செயல்பட்டு வருகிறோம்

நாங்கள் போட்டித்தன்மையுடன்  செயற்பட  விரும்பாததால் ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு நாங்கள் தயாராக இல்லை. ஆனால் இப்படியே தொடர்ந்து செல்ல முடியாது. இதுவே எங்களுக்குக் கிடைத்துள்ள  கடைசி வாய்ப்பு.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமானால், இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பிற்குள் நாம் செயல்பட வேண்டும்.

அதிலிருந்து நாம் பின்வாங்கினால் இன்னும் 10 வருடங்களில் இந்த நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடியை சந்திப்பதை தடுக்க முடியாது. அந்த நிலைக்கு திரும்புவதை நாம் யாரும் விரும்பவில்லை. எனவே நீங்கள் அனைவரும் மிகவும் போட்டித்தன்மையுடன் செயற்பட  வேண்டும். எங்களிடம் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் உள்ளன. எனவே போட்டித்தன்மைக்கு முகங்கொடுத்து   முன்னேற வேண்டும் என்றுமு; அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: