மஹிந்த பின்னால் சென்றது நான் இல்லை சாணக்கியனே – நாடாளுமன்றில் சுட்டிக்காட்டிய முன்னாள் பிரதமர் ரணில்!

Saturday, May 7th, 2022

தான் மஹிந்த ராஜபக்ஷவுடன் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தான் ராஜபக்ஷக்களுடன் இருப்பதாக சாணக்கியன் குறிப்பிட்டதாகவும் ஆனால் தான் அவர்களுடன் இருக்கவில்லை என்றும் ராஜபக்ஷ பிரபாகரனுடன் இணைந்து தன்னை தோற்கடிக்க நினைத்தார் என்றும் ரணில் கூறியுள்ளார்.

ராஜபக்சக்களுடன் தாம் ஒருபோதும் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை என தெரிவித்த முன்னாள் பிரதமர், 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தம்மை தோற்கடிப்பதற்காக ராஜபக்சக்களே விடுதலைப் புலிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தான் இராசமாணிக்கம் சாணக்கியன் தொடர்பில் ஒரு விடயத்தை தெரிவிக்க வேண்டும் என குறிப்பிட்ட ரணில், 2013ஆம் ஆண்டு பெப்ரவரி 21ஆம் திகதி அருந்திக்க பெர்ணான்டோ மற்றும் சாணக்கியன் ஆகியோரை சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டாளர்களாக அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்திருந்தார் என சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, மஹிந்த பின்னால் சென்றது தான் இல்லை என்றும், சாணக்கியனே அவர்கள் பின்னால் சென்றார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்தான் அப்போது ‘மஹிந்த சரணம் கச்சாமி, பெசில் சரணம் கச்சாமி, நாமல் சரணம் கச்சாமி’ என்று அவர்கள் பின்னால் சென்றிருந்தார் என்றும் ரணில் கூறியுள்ளார்.

எனவே, ஏன் சாணக்கியன் தன்னைப் பற்றி இவ்வாறு தெரிவித்தார் என்பது புரியவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிற்கு வாக்களிக்குமாறு சபையில் எதிர்க்கட்சியில் உள்ள பல நாடாளுமன்ற உறுப்பினர்களை ரணில் விக்கிரமசிங்க அணுகியதாக இராசமாணிக்கம் சாணக்கியன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: