போதைப்பொருள் கடத்தலுக்காக பிரத்தியோகமாக மாற்றியமைக்கப்பட்ட கெப் ரக வாகனம் – ஒன்றரை கோடி ரூபாய் பணத்துடன் ஐந்து சந்தேக நபர்கள் கைது!

Friday, September 1st, 2023

போதைப்பொருள் கடத்தலுக்காக பிரத்தியோகமாக மாற்றி அமைக்கப்பட்ட கெப் ரக வாகனத்துடனும், ஒன்றரை கோடி ரூபாய் பணத்துடனும் ஐந்து சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (29) மற்றும் புதன்கிழமை (30) ஆகிய இரு தினங்களும், கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து கூட்டு தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

அதன் போது, சந்தேகத்திற்கு இடமான கெப் ரக வாகனம் ஒன்றினை சோதனையிட்ட போது, அந்த வாகனத்தின் பெட்டியின் கீழ் மேலுமொரு பெட்டி அடிக்கப்பட்டு, போதைப்பொருள் கடத்தலுக்கு ஏதுவாக வாகனத்தை மாற்றி அமைக்கப்பட்டு இருந்தமையை கண்டறிந்துள்ளனர்.

அதனை அடுத்து வாகனத்தில் பயணித்த இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் மூன்று சந்தேக நபர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் உரும்பிராய், மாதகல் மற்றும் ஊவா மாகாணம்,  குடா ஓயா ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும், அவர்களிடம் இருந்து கெப் ரக வாகனம், மோட்டார் சைக்கிள் மற்றும் 15 மில்லியன் ரூபாய் பணம் என்பன மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களும், மீட்கப்பட்ட பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது

Related posts: