போக்குவரத்து பிரச்சினை அல்லாத பாடசாலைகளை 5 நாட்களும் நடத்த அவதானம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Monday, August 1st, 2022

போக்குவரத்து பிரச்சினை அல்லாத பாடசாலைகளின் செயற்பாடுகளை வாரத்தின் 5 நாட்களும் முன்னெடுப்பது தொடர்பில் அதிபர்கள் மற்றும் ஆசியர்களின் இணக்கப்பாட்டுடன் வலய கல்வி பணிப்பாளரின் அனுமதிக்கு அமைய தீர்மானிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மாகாண போக்குவரத்து அதிகாரசபை, பாடசாலை போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக தனியார் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதோடு சாதாரண கட்டண அடிப்படையில் ஆசிரியர்களும் மாணவர்களும் அதில் பயணிக்க முடியும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், போக்குவரத்து பிரச்சினை நிலவும் பாடசாலைகள் இன்று முதல் எதிர்வரும்  5ஆம் திகதி வரையான 5 நாட்களில் கடந்த வாரத்தை போன்று 3 நாட்களுக்கு மாத்திரம், பாடசாலை கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பாடசாலை செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்கள் வீட்டில் இருந்து கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். அல்லது இணையவழி கற்பித்தல் முறைமையில் ஈடுபடுவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: