கொடுப்பனவுகள் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் – அரச பணியாளர்கள் சம்பள கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியானது அறிவிப்பு!

Wednesday, January 11th, 2023

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன ஆகியோர் இன்று அரச பணியாளர்கள் சம்பள கொடுப்பனவுகள் தொடர்பில் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இதனடிப்படையில் அரச ஊழியர்களின் சம்பளம் அல்லது சமுர்த்தி உள்ளிட்ட நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும், அரசாங்க ஊழியர் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சமுர்தி திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமான நிலையில் இருந்தாலும், இலங்கை இன்னும் நெருக்கடியிலிருந்து முழுமையாக வெளிவரவில்லை என்று அவர் கூறினார்.

இதைப் பற்றி தேவையற்ற அச்சம் எதுவும் இருக்கக் கூடாது. மேலும், சம்பந்தப்பட்ட துறை, அமைச்சுக்களுடன் கலந்தாலோசித்து நிலுவையில் உள்ள கொடுப்பனவுகளை தீர்ப்பனவு செய்வதற்கான ஒழுங்கான மற்றும் முறையான திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது” என்றார்.

எவ்வாறாயினும், திறைசேரி தற்போது கடுமையான நிதி பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கான அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகள் போன்ற ஏனைய நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

குறைந்த வருமானம் பெறும் அனைத்து குடும்பங்களுக்கும் சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்குவது ஓரிரு வாரங்கள் தாமதமாகும் என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: