பல்கலைமாணவர்கள் உயிரிழப்பு தொடர்பான விசாரணை அறிக்கை விரைவில் பொலிஸ் ஆணைக்குழுவிடம்!
Sunday, October 30th, 2016
யாழ். பல்கலை மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அறிக்கை, எதிர்வரும் வியாழக்கிழமை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள விசேட விசாரணைக் குழு அதிகாரிகளினால் இந்த அறிக்கை தயார் செய்யப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தள்ளார். இந்த சம்பவம் தொடர்பான பல்வேறு தரவுகள், குறித்த குழுவினரால் சேகரிக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் மாஅதிபரின் பணிப்புரைக்கு அமைய கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகளூடாக கடந்த திங்கட்கிழமை இந்த விசேட குழு நியமிக்கப்பட்டது. இந்த குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, அறிவிக்கப்படும் என தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து – சுன்னாகம் நோக்கி மோட்டார் சைக்களில் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் கொக்குவில், குளப்பிட்டிச் சந்திப்பகுதியில் கடந்த 20 ஆம் திகதி நள்ளிரவு இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
யாழ். கந்தரோடை பகுதியை சேர்ந்த யாழ். பல்கலையில் அரசறிவியல் துறையில் கல்வி பயின்ற மாணவன் நடராசா கஜன் மற்றும் கிளிநொச்சியை சேர்ந்த யாழ். பல்கலைக்கழக ஊடகக்கற்கை மாணவனான பவுண்ராஜ் சுலக்ஷ்னுமே இந்த சம்பவத்தில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|