பயங்கரவாதத் தடைச் சட்டம் சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாகத் திருத்தப்பட்டு வருகிறது – வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அறிவிப்பு!

Wednesday, February 23rd, 2022

பயங்கரவாத தடைச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் மிகவும் விரிவான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வெளியிடுவதற்கான ஆரம்பப் படியாகும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

பெப்ரவரி இறுதி வாரத்தில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடருக்கு முன்னதாக மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான முன்னேற்றம் குறித்த தகவல்களைப் பகிர்வதே இந்த மாநாட்டின் நோக்கமாகும் என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

43 வருடங்களின் பின்னர், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சர்வதேச நியதிகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாகக் கொண்டுவரும் நோக்கத்துடன் திருத்தப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் பல மாதங்களாக நீண்ட விவாதங்களுக்குப் பின்னர் திருத்தப்பட்டு வருவதாக விளக்கமளித்த அமைச்சர், முன்மொழியப்பட்ட திருத்தங்கள் மிகவும் விரிவான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வெளியிடுவதற்கான ஆரம்பப் படியாகும் என சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கணிசமான திருத்தங்களில் தடுப்புக்காவல் உத்தரவுப் பிரிவுகளில் திருத்தங்களை மேற்கொள்ளுதல், கட்டுப்பாட்டு ஆணைகள், உத்தரவுகளை வெளிப்படையாக அங்கீகரித்தல், நீண்ட காலமாக தடுப்புக் காவலில் வைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்குகளை விரைவாகத் தீர்த்து வைத்தல், கருத்துச் சுதந்திரத்திற்கு இடையூறு விளைவிக்கும் பிரிவுகளை இரத்துச் செய்தல், நீதிவான்கள் மற்றும் சட்ட வைத்திய அதிகாரிகளின் அணுகலுக்கான விதிகளை அறிமுகப்படுத்துதல், தடுப்புக் காவலில் உள்ள காலத்தில் துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதைகளைத் தடுத்தல், குடும்பத்துடன் தொடர்பு கொள்ளும் உரிமை, நீண்டகாலக் கைதிகளுக்கு பிணை வழங்குதல், வழக்குகளை நாளாந்தம் விசாரணை செய்தல் போன்ற அம்சங்கள் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

உயர்நீதிமன்ற நீதியரசர் நவாஸ் தலைமையிலான விசாரணை ஆணைக்குழுவின் ஊடாக பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் தொடர்பிலும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கருத்துரைத்துரைள்ளதுடன், முதலாவது இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது இடைக்கால அறிக்கையும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பான யோசனைகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட 9 பேர் கொண்ட நிபுணர் குழு தொடர்பிலும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

நிபுணர் குழு தமது பூர்வாங்க ஆலோசனைகளை நிறைவு செய்துள்ளதுடன், அதற்கான முன்மொழிவுகள் விரைவில் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும்.

அதன் பின்னர், ஜனநாயக நடைமுறையின் அடிப்படையில் பரந்தளவிலான பொது ஆலோசனைகள் பின்பற்றப்படும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: