பதவியை பெறும் ஆசை எனக்கு இருக்கவில்லை – பதவிகள் என்னைத் தேடியே வந்தன என்பதுதான் உண்மை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
Monday, March 11th, 2024
நாடு நெருக்கடியில் சிக்கித் தவித்த 2022 ஆம் ஆண்டில் பிரதமர் பதவியையோ அல்லது ஜனாதிபதிப் பதவியையோ பெறும் ஆசை எனக்கு இருக்கவில்லை. அந்த ஆண்டில் அந்தப் பதவிகள் என்னைத் தேடி வந்தன என்பதுதான் உண்மை என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குளியாப்பிட்டிய மாநகர சபை மைதானத்தில் நேற்று (10) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது பொதுக் கூட்டத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நான் அரசைப் பொறுப்பேற்ற போது, நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வர முடியும் என நான் எதிர்பார்க்கவில்லை. இன்று நாம் வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிக்கப்பட உள்ளோம். இதற்கு குறைந்தது ஐந்து வருடங்கள் ஆகும் என்று பலர் நினைத்தார்கள்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இங்கு வந்துள்ளனர். அவர்களுடனும் உத்தியோகபூர்வ கடன் வழங்கிய நாடுகளுடனும் பேச்சு நடத்தி மே அல்லது ஜூன் மாதத்தில் முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட எதிர்பாரக்கிறோம். அதன் பிறகு, வங்குரோத்தற்ற நாடாக, சலுகைகளைப் பெற முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தப் பயணத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடிந்தது. இந்த ஆண்டு அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடிந்துள்ளது. மேலும் அஸ்வெசும திட்டத்தின் கீழ் சமுர்தியை விட மூன்று மடங்கு நன்மைகள் வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் 24 இலட்சம் பேருக்கு அந்த நன்மைகள் கிடைக்கும்.
மேலும், காணி அனுமதிப் பத்திரம் உள்ள அனைவருக்கும் நிரந்தர காணி உரித்து வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கொழும்பில் 50 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு சட்டபூர்வ உரிமைகள் வழங்கப்படும்.
அத்துடன் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான ஆணைக்குழுவை உருவாக்கியுள்ளோம். நாடாளுமன்றக் குழுக்கள் நியமிக்கப்பட்டன. பெண்களுக்கு அதிகாரமளிக்கும் சட்டமூலம் மற்றும் பாலின சமத்துவ சட்டமூலம் ஆகியவற்றை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், பொதுஜன பெரமுன எம்.பி.க்கள் என்னைச் சந்தித்து ஜனாதிபதி பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுத்தனர். நான் பிரதமராக பதவியேற்றேன். இதை ஏற்றுக்கொள்ள வேறு யாரும் முன்வரவில்லை. அன்றைய சூழ்நிலையில் மொட்டுக் கட்சியால் ஏற்க முடியாது. சஜித், அநுர ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. மேலும், சம்பந்தன் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், அவரால் அதை ஏற்க முடியாது. எனவே, பிரதமர் பதவியை ஏற்றேன்.
நிதி அமைச்சர் என்ற முறையில் சர்வதேச நாணய நிதியத்திடம் பேசினேன். அதன் ஆதரவு கிடைத்தது. இந்தநிலையில்தான் 2022 ஜூலை 9 ஆம் திகதி நடந்த எதிர்ப்பு முன்னாள் ஜனாதிபதியை பதவி நீக்க நடந்ததா அல்லது என்னைப் பதவி நீக்க நடந்ததா என்று தெரியவில்லை. எவ்வாறாயினும், ஜனாதிபதி மாளிகை சுற்றிவளைக்கப்பட்டபோது முன்னாள் ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேறினார். எனது வீட்டுக்குத் தீ வைக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி வழங்கிய பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன்.
நான் அரச கட்டடமொன்றில் பதில் ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்வதற்கு அரச அதிகாரிகள் அஞ்சினார்கள். ஆனால், விகாரையில் நான் பதில் ஜனாதிபதியாகப் பதவியேற்றேன் என்றும் பதவி என்னைத் தேடி வந்தது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


