நீதிமன்றத்தில் ஒலி, ஒளி சாட்சியத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்!

Friday, April 7th, 2017

குற்றச்செயல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்கள், நீதிமன்றத்தில் பிரசன்னமாகாமல் வெளிநாட்டில் இருந்து ஒலி, ஒளி தொழில்நுட்பத்தினூடாக சாட்சியமளிப்பதற்கு இயலச்செய்யும் சட்டத் திருத்தமொன்றை கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளது.

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரமொன்றுக்கு அமையவே அமைச்சரவை இந்த அங்கிகாரத்தை வழங்கியுள்ளது. குற்றச்செயல்களினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியாளர்களுக்கு உதவியளித்தல் மற்றும் பாதுகாப்பளித்தல் தொடர்பிலான 2015 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க சட்டத்திலேயே இது சம்பந்தமான திருத்தம் கொண்டு வரப்படுகிறது.

அந்த வகையில், குற்றச்செயல்களினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியாளர்கள் நீதிமன்றத்தில் பிரசன்னமாகாமல் நாட்டுக்கு வெளியில் இருந்து ஒலி, ஒளி ஊடக தொழில்நுட்பத்தின் ஊடாக சாட்சியமளிப்பதற்கு இயலச்செய்யும் ஏற்பாடுகளுடன் கூடியதாக மேற்படி சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூல வரைவை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பாராளுமன்ற அனுமதிக்காகச் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இந்தச் சட்டத்திருத்தத்தின் பிரகாரம், இலங்கைக்கு வெளியில் தூர இடமொன்றில் இருக்கும் யாரேனும் பாதிக்கப்பட்ட ஒருவரோ அல்லது சாட்சியாளரோ அவரிருக்கும் நாட்டிலுள்ள இலங்கை தூதுவராலயத்தில் இருந்து ஒலி, ஒளி ஊடக தொழில்நுட்பத்தின் ஊடாக சாட்சியமோ அல்லது வாக்குமூலமோ அளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை இணைப் பேச்சாளரான ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலகவே மேற்படி தகவல்களை வெளியிட்டார்.

Related posts: