நிதி மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருங்கள் – பொதுமக்களுக்கு மத்திய வங்கி எச்சரிக்கை!

Thursday, October 28th, 2021

ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் தங்கள் கணக்குகளில் பெருந்தொகை வெளிநாட்டு அல்லது மற்றும் உள்நாட்டு நாணயம் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகவும் அத்தகைய முடக்கத்தை நீக்க உதவக்கூடிய யாராவது ஒரு நபருக்கு கவர்ச்சிகரமான தொகையை அவர்கள் வழங்குவார்கள் என்றும் கூறுகின்றதாகத் தோன்றுகின்றதான சில மோசடிகள் தொடர்பான தகவல்களை அண்மைக் காலமாக இலங்கை மத்திய வங்கி பெற்று வருகிறது.

சில சமயங்களில் அவர்கள் பல்வேறு கணக்குகளுக்குப் பெருந்தொகைப் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை மீளப்பெற மத்திய வங்கியின் அனுமதியைப் பெறவேண்டி மட்டுமே இருப்பதாகவும் காட்டும் போலி ஆவணங்களையும் காட்சிப்படுத்துகின்றனர்.

இத்தகைய சில சந்தர்ப்பங்களில், மேற்படி பரிமாற்றங்களை நிறைவேற்றுவதற்காக எனக்கூறி, தனிநபர் அடையாள இலக்கங்கள், அட்டை சரிபார்த்தல் இலக்கம், அதேநேரக் கடவுச்சொல், பயன்படுத்துனர் அடையாள இலக்கம், கடவுச்சொல், தொலைபேசி இணைய வங்கியியலின் அதேநேரக் கடவுச்சொல் போன்றன உள்ளடங்கலான கணக்கு விபரங்களை வாடிக்கையளர்களிடமிருந்து மோசடியாளர்கள் கோருகின்றனர். வாடிக்கையாளர் அத்தகைய விபரங்களை அளிப்பதானது அவர்களைப் பாரிய நிதி ஆபத்திற்கு இட்டுச் செல்லும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

இத்தகைய மோசடியான அறிவித்தல்களையும் நடைமுறைகளையும் கருத்திற்கொள்ள வேண்டாம் என மத்திய வங்கி பொதுமக்களைக் கோருவதோடு, இத்தகைய மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் எல்லோரையும் அறிவுறுத்துகிறது. எந்தவொரு இரகசியத் தரவுகளையும் குறிப்பாக, கணக்குப் பயன்படுத்துனர் அடையாள இலக்கம், கடவுச்சொல், தனிநபர் அடையாள இலக்கம், அதேநேரக் கடவுச்சொல் மற்றும் கணக்கு சரிபார்த்தலுடன் தொடர்புடைய தரவுகள் போன்றவற்றை யாருடனும் பகிர வேண்டாம் என்றும் மத்திய வங்கி எல்லோருக்கும் அறிவிக்கின்றது.

மேலும், குறுந்தகவல் சேவை எச்சரிக்கை, அதேநேர அறிவிப்புச் சேவைகள் முதலியவற்றைத் தங்களது வங்கிகளிலிருந்து பெற்றுக்கொள்ளுமாறு மத்திய வங்கி பொதுமக்களைக் கேட்டுக்கொள்வதோடு இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் கணக்குகளைப் பாவித்து ஏதேனும் மோசடிகள் இடம்பெறுகின்றனவா என்பதை உடனடியாக அறியலாம் என்பதையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: