நாளைமுதல் யாழ் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம் – முன்னுரிமை அடிப்படையில் வழங்க ஏற்பாடு என சுகாதார பணிப்பாளர் தெரிவிப்பு!

Saturday, May 29th, 2021

யாழ்ப்பாணத்தில் கொவிட் – 19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நாளைமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான முக்கிய கூட்டமொன்று நேற்று யாழ்ப்பாணம் – பண்ணையில் உள்ள மாவட்ட சுகாதார திணைக்கள அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட சீனோபாம் தடுப்பூசிகளில் 50 ஆயிரம் தடுப்பூசிகள் யாழ்ப்பாண மாவட்டத்துக்கென ஒதுக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் இன்றையதினம் (29) யாழ்ப்பாணம் மாவட்டத்தை சென்றடையவுள்ளன.

யாழ்மாவட்டத்தில் உள்ள சுகாதார வலயங்களில் கொவிட் அச்சுறுத்தல் மிக்க பகுதிகளில் அதிகபடியாகவும், கொவிட் அச்சுறுத்தல் குறைந்த பகுதிகளில் குறைந்த அளவிலும் என்ற வகையில் தடுப்பூசி செலுத்தப்படும் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது கொவிட் தடுப்பூசிகள் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் வழங்கப்படுகின்றன. இதேவேளை நாளையதினம் யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: